Pages

Thursday, April 3, 2014

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் புதிய வழி

சர்க்கரை நோய்
பொதுவாக, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கணையமாகும். இதில் உள்ள பீட்டா அணுக்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் திரவம், இந்த செயலைப் புரிகின்றது. இந்த செயல்பாடு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சாண்டியாகோ மருத்துவக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.
 
இந்தக் கண்டுபிடிப்பு, தற்போது மற்றொரு புதிய முயற்சிக்கும் வித்திட்டுள்ளது. சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, இந்த பீட்டா அணுக்களின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலம், இந்நோய் வராமல் தடுக்கலாம் என்பதே அந்தப் புதிய முயற்சி ஆகும்.
 
பிராக்டல்கைன் எனப்படும் புரதம் கலந்த மெல்லிய திசுப்படலத்தை பீட்டா அணுக்களின் மீது பொருத்தினால், அவை புரத சத்தை ரத்தத்தில் கலக்கச் செய்து, இன்சுலினை சுரக்க உதவி புரியும் என்பதே விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். இதற்கு முன்னால் இந்த முயற்சி பற்றி எதிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் இது ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு என்றும் பேராசிரியர் ஒலேப்ஸ்கி கூறுகின்றார்.
 
இன்சுலின் திரவ உற்பத்தியும் குளுக்கோஸ் கட்டுப்படுத்தப்படுதலும், சர்க்கரை நோய் வராமலிருக்கத் தேவையான முக்கிய விஷயங்கள் ஆகும். இதனை பிராக்டல்கைன் படலம் திறம்பட செய்வதோடு வேறு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது இதன் சிறப்பாகும்.

மூலிகை மருத்துவ குறிப்புகள்

மூலிகை மருத்துவம்
பெரிய நோய்களை தவிர, அன்றாடம் உடலில் ஏற்படும் சீர்கேடுகளை வீட்டில் உள்ள பொருட்களின் மூலமாகவே போக்கி கொள்ளலாம்.

சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது.

மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது.

திப்பிலி: திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும்.

தூதுவளை: இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும் இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். இதில் உள்ள சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் வைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம்.

கீழாநெல்லி: தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து, சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை- மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்லமருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது.

துளசி: மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசூதல், தொண்டை புண், தொண்டைச்சளி குணமடையும்.

கரிசலாங்கண்ணி: கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுல்ல இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது.

இருமலை மட்டுபடுத்தும், அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரம் இருமுறை உண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும்.

புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியில் தகவல்

புத்துணர்ச்சி பானம்
மக்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும் சக்தி பானங்கள் பல விற்பனைசந்தையில் உள்ளன. ஆனால் இவை அதிக ரத்த அழுத்தத்தையும், மரணம் விளைவிக்ககூடிய மாரடைப்பையும் தர வல்லவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

ஏற்கனவே ரத்த அழுத்தத்தினாலோ, இதய நோய்களாலோ அவதிப்படுபவர்கள், இது போன்ற பானங்களை எச்சரிக்கையுடன் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு முன்னால், இது குறித்து வெளியிடப்பட்ட ஏழு புள்ளிவிவரக் கணக்கீடுகளையும். ஆய்வு செய்தனர். இந்தக் கணக்கீடுகளில், 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

முதலில், இந்த ஆய்வாளர்கள் ஒன்று முதல் மூன்று எண்ணிக்கை வரை சக்தி பானங்கள் குடித்தவர்களின் இதயத்துடிப்பை பரிசோதித்தார்கள். அவர்களின் ஒவ்வொரு துடிப்பிற்கும் நடுவில் 10 மில்லிசெகண்டு இடைவெளி அதிகரித்து இருந்தது. இது இதயத்துடிப்பின் சீரான தன்மையைக் குலைத்து, இறுதியில் மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

சக்தி பானத்தை அருந்திய 132 பேரை பரிசோதித்த அவர்கள், அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு 3.5 புள்ளிகள் அதிகரித்து இருந்ததையும் கண்டறிந்தார்கள்.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும், அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய நோய்த்தொற்று மற்றும் அதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்பு குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

Tuesday, April 1, 2014

வியர்வையில் குளிக்கிறீர்களா?

வியர்வை
கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் அதிகமாக இருக்கும். எவ்வளவு வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் அது தீர்வதில்லை.

அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும்.

அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து தங்களுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.

வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு. சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறிவிடுகிறது. துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படிக் குளிப்பவர்கள் அந்த வாளித் தண்ணீரில் இயற்கை நறுமணப் பொருட்களை இட்டு உடலுக்கு ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகிவிடும்.

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும். கொஞ்சம் கவனம் வைத்தால், வியர்வைப் பிரச்சினையை விலக்கிவிடலாம்!

Sunday, March 30, 2014

பெண்களுக்கு வரும் பொதுவான உடல் பிரச்சினைகள்

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. உடற்பயிற்சி என்பது நம் உடல் எடையை குறைத்து நம்மை மிகவும் ஒல்லியான உடலாக மாற்றுவதற்கு என்று பலர் நினைக்கிறாகள்.

அது உண்மையல்ல. நம் உடல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு கருவிதான் உடற்பயிற்சி. பெண்களை வாட்டும் மிக முக்கியமான சில உடல் பிரச்சினைகளை இப்பொழுது பார்ப்போம்.

மாதவிலக்கு பிரச்சினைகள்:

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்கு முன் வீக்கம், வயிற்றுப் பிடிப்பு, மார்பக வீக்கம், மலச்சிக்கல், மூட்டு மற்றும் தசை வலி, முகப்பரு மற்றும் ஊசலாடும் மன உணர்வுகளால் ஒவ்வொரு பெண்ணும் பாதிக்கப்படுகிறாள்.

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்: 

இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதவிலக்கில் பிரச்சினை மற்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடையாமல் மற்றும் சிறியதாக இருக்கும். இதனால் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

கருப்பை கட்டிகள் (நார்த்திசுக்கட்டிகள்):

நார்ப் பொருளால் கட்டியானது கருப்பையில் தோன்றுவதால் அதிகமான உதிரப்போக்கு மற்றும் வலி, கருவுறுதலில் சிக்கலை உண்டாக்கும். இக்கட்டிகள் பொதுவாக இயற்கையாகவே மாதவிலக்கு நின்று விட்ட பெண்களுக்கு சுருங்கி விடும். சில நேரங்களில் அவை சுருங்காமல் மிகுந்த வலியைக் கொடுக்கும்.

பெரும்பாலான பெண்கள் இவ்வகை நார்த்திசுக்கட்டிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரக நோய்த்தொற்று: இது ஆண்களை விடவும் பெண்களை அவர்களது மாதவிலக்கானது முற்றிலும் நின்று விட்ட பிறகு தாக்குகின்றது. சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபட முடியும்
உடல் பிரச்சினைகள்


இரத்த சோகை:

குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் முக்கியத்துவம் தரும் பெண்கள் தங்களுடைய உணவைச் சரியாக எடுத்துக் கொள்ளாததாலேயே இந்நோய் அவர்களை தாக்குகின்றது. இரும்புச் சத்துள்ள இயற்கை, உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மார்பக மற்றும் கர்ப்பபை வாய்ப்புற்றுநோய்:

பெரும்பாலும் பெண்களை அச்சுறுத்தும் நோய் என்று இதைச் சொல்லலாம். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தாமதமான திருமணம், மோசமான உணவு, அதிகமாக புகையிலை மற்றும் மது அருந்துதல் இவற்றின் மூலம் இந்நோய் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மார்பகத்தில் கட்டியோ அல்லது தோல் தடித்து இருந்தாலோ, மார்பக காம்பிலிருந்து திரவம் போன்ற பொருள் வெளியேறினாலோ கட்டாயம் அவை மார்பக புற்றுநோயின் அறிகுறி என்று சொல்லலாம்.

பாலியல் தொடர்பு, குழந்தைப்பேறில் இடைவெளி இல்லாமல், சுகாதாரமின்மை இவை அனைத்தும் கர்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணங்களாகும். இந்நோய் பெரும்பாலும் முற்றிய பிறகு வெளிச்சத்திற்கு வருகின்றது என்று சொல்லலாம்.

இதய நோய்கள்:

இப்பொழுது இளம் பெண்களையும் இந்நோய் தாக்குகின்றது. மருந்து மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது, முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்றவையும் இந்நோய் தோன்றக் காரணமாக இருக்கின்றன.

ஆஸ்டியோபோரோசிஸ்:

எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. கீலவாதம், மனஅழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களும் பெருமளவில் பெண்களை தாக்குகின்றன.

Saturday, March 29, 2014

கருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம்


மாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம்.

• கருப்பை கோளாறுகளை தவிர்க்க வாழைப்பூ சாறு, பொரியல் வாரம் ஒரு
முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• வெள்ளைப்படுதலை தடுக்க முருங்கைக் கீரை, தயிர் சேர்க்கவும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.

• முருங்கைக் கீரை சூப், முடக்கத்தான் கீரை சூப், மணத்தக்காளிக் கீரை சூப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

• கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த பொடி வகை அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருப்பை தொந்தரவால் உண்டாகும் முழங்கால் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை தடுக்கலாம்.

• ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

• ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

காலை நேர உணவு அவசியம் !

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.