Pages

Sunday, March 30, 2014

பெண்களுக்கு வரும் பொதுவான உடல் பிரச்சினைகள்

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. உடற்பயிற்சி என்பது நம் உடல் எடையை குறைத்து நம்மை மிகவும் ஒல்லியான உடலாக மாற்றுவதற்கு என்று பலர் நினைக்கிறாகள்.

அது உண்மையல்ல. நம் உடல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு கருவிதான் உடற்பயிற்சி. பெண்களை வாட்டும் மிக முக்கியமான சில உடல் பிரச்சினைகளை இப்பொழுது பார்ப்போம்.

மாதவிலக்கு பிரச்சினைகள்:

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்கு முன் வீக்கம், வயிற்றுப் பிடிப்பு, மார்பக வீக்கம், மலச்சிக்கல், மூட்டு மற்றும் தசை வலி, முகப்பரு மற்றும் ஊசலாடும் மன உணர்வுகளால் ஒவ்வொரு பெண்ணும் பாதிக்கப்படுகிறாள்.

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்: 

இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதவிலக்கில் பிரச்சினை மற்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடையாமல் மற்றும் சிறியதாக இருக்கும். இதனால் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

கருப்பை கட்டிகள் (நார்த்திசுக்கட்டிகள்):

நார்ப் பொருளால் கட்டியானது கருப்பையில் தோன்றுவதால் அதிகமான உதிரப்போக்கு மற்றும் வலி, கருவுறுதலில் சிக்கலை உண்டாக்கும். இக்கட்டிகள் பொதுவாக இயற்கையாகவே மாதவிலக்கு நின்று விட்ட பெண்களுக்கு சுருங்கி விடும். சில நேரங்களில் அவை சுருங்காமல் மிகுந்த வலியைக் கொடுக்கும்.

பெரும்பாலான பெண்கள் இவ்வகை நார்த்திசுக்கட்டிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரக நோய்த்தொற்று: இது ஆண்களை விடவும் பெண்களை அவர்களது மாதவிலக்கானது முற்றிலும் நின்று விட்ட பிறகு தாக்குகின்றது. சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபட முடியும்
உடல் பிரச்சினைகள்


இரத்த சோகை:

குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் முக்கியத்துவம் தரும் பெண்கள் தங்களுடைய உணவைச் சரியாக எடுத்துக் கொள்ளாததாலேயே இந்நோய் அவர்களை தாக்குகின்றது. இரும்புச் சத்துள்ள இயற்கை, உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மார்பக மற்றும் கர்ப்பபை வாய்ப்புற்றுநோய்:

பெரும்பாலும் பெண்களை அச்சுறுத்தும் நோய் என்று இதைச் சொல்லலாம். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தாமதமான திருமணம், மோசமான உணவு, அதிகமாக புகையிலை மற்றும் மது அருந்துதல் இவற்றின் மூலம் இந்நோய் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மார்பகத்தில் கட்டியோ அல்லது தோல் தடித்து இருந்தாலோ, மார்பக காம்பிலிருந்து திரவம் போன்ற பொருள் வெளியேறினாலோ கட்டாயம் அவை மார்பக புற்றுநோயின் அறிகுறி என்று சொல்லலாம்.

பாலியல் தொடர்பு, குழந்தைப்பேறில் இடைவெளி இல்லாமல், சுகாதாரமின்மை இவை அனைத்தும் கர்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணங்களாகும். இந்நோய் பெரும்பாலும் முற்றிய பிறகு வெளிச்சத்திற்கு வருகின்றது என்று சொல்லலாம்.

இதய நோய்கள்:

இப்பொழுது இளம் பெண்களையும் இந்நோய் தாக்குகின்றது. மருந்து மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது, முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்றவையும் இந்நோய் தோன்றக் காரணமாக இருக்கின்றன.

ஆஸ்டியோபோரோசிஸ்:

எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. கீலவாதம், மனஅழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களும் பெருமளவில் பெண்களை தாக்குகின்றன.

No comments: