Pages

Friday, December 13, 2013

டயட் நோன்புக் கஞ்சி


என்னென்ன தேவை?

கஞ்சி மிக்ஸ்...

சிவப்பரிசி - 1 கப், கொள்ளு - 1 கப், பார்லி - 1 கப்.

கஞ்சியில் சேர்க்க...

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ்- சிறிது, இஞ்சி பூண்டு விழுது - சிறிது புதினா இலைகள்- சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணை - அரை டீஸ்பூன்.

எப்படி செய்வது?


சிவப்பரிசி, கொள்ளு, பார்லி, ஆகியவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வருத்து மெஷினில் கொடுத்து ரவையா உடைத்துக் கொள்ளவும். தேவையான போது, அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்து கஞ்சி மிக்ஸ்
சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறி, வெந்ததும் இறக்கவும், கடாயில் எண்ணை விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். இதையும் தயாராக
உள்ள கஞ்சியையும் சேர்த்து உப்பு சேர்த்து பரிமாறவும்.

காலை உணவுக்கு ஏற்றது. பார்லி, உடலில் உள்ள கெட்ட நீரை எடுக்கும். கொள்ளு கொழுப்பைக் கரைக்கும்.

சுரைக்காய் பாத்


என்னென்ன தேவை?

தோல் நீக்கி பொடியாக நறுக்கிய சுரைக்காய்-1 கப், கொழுப்பு நீக்கிய தயிர்- சிறிது, உப்பு-தேவைக்கேற்ப.

தாளிக்க....

கடுகு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணை.

எப்படிச் செய்வது?


சுரைக்காயை இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவும். தயிரில் தாளிப்புப் பொருள்களைச் சேர்த்து, சுரைக்காய் கலவையில் கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு அரிசி உணவு வேண்டாம் என கேட்பவர்களுக்கு இந்த சுரைக்காய் பாத் சரியான மாற்று. ஒரு சப்பாத்தியும் ஒரு கப் சுரைக்காய் பாத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரின்றி அமையாது உலகு! மனிதனோ, மரமோ.... புல்லோ, புழுவோ...


 
எந்த உயிருக்கும் தண்ணீரே ஆதாரம். உணவு, உறக்கம் இல்லாமல் கூட ஒருவரால் உயிர் வாழ்ந்து விட முடியும். தண்ணீர் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. மனித வாழ்க்கை சீராக இயங்க இன்றியமையாத திரவம் தண்ணீர். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அவசியம். 1 கிராம் உணவு செரிக்க 5மி.லி. தண்ணீர்  தேவை. தோராயமாக ஒரு நாளைக்கு 500 கிராம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். குறையவும் செய்யலாம். அதிகமாவதை நீர்கோர்ப்பு (வாட்டர் ரீட்டென்ஷன்) என்றும், குறைவதை உடலில் நீர் வறட்சி நிலை என்றும் சொல்கிறோம்.
நீர்கோர்ப்புக்கான காரணங்கள்...

உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வது மசாலா அதிகமுள்ள உணவு அரிசி போன்ற எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பது, பருமன், நீண்ட நேரம் நின்றபடியோ, நடந்து கொண்டோ, உடலை வருத்தி வேலை பார்ப்பது, ஒரே நிலையில் உட்காருவது, கர்ப்பம்...

சிலருக்குத் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கினாற்போல இருக்கும். களைப்பாகவே உணர்வார்கள். இதெல்லாம் உடலில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சனைக்கான அறிகுறிகள் சிறு நீரகக் கோளாறு உள்ளவர்கள், பருமனானவர்கள் ஹைப்பர் டென்ஷன் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் அது அவர்களது நோயின் விளைவாக இருக்கலாம். மருத்துவரைக் கலந்தாலோசித்து பிறகே எதையும் செய்ய வேண்டும். மற்றபடி நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்கள் இப்படி உணர்ந்தால், அவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அரிசி உணவைக் குறைத்து, கோதுமை, கேழ்வரகு, ஒட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கீரை மாதிரியான நார்ச்சத்துமிக்க உணவுகள் அவசியம். உப்பின் அளவை உடனடியாகக் குறைத்தாக வேண்டும்.தண்ணீர் கோர்த்துக் கொள்வது எத்தனை ஆபத்தனதோ அதே மாதிரி தான் நீர் அற்ற வறட்சி நிலையும். ௨௦ நபர்களில் ஒருவருக்கு இப்பிரச்சனை வருகிறது. மயக்கம், தலைசுற்றல், களைப்பு, தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் தண்ணீர் வற்றும் போது தீராத தலைவலி வரும். உடலுக்குத் தேவையான தண்ணீர் சேர்ந்த பிறகுதான் அந்த தலைவலி நீங்கும்.

அதிக வெயில் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகிய இரு விசயங்களினால் தான் பெரும்பாலும் உடலில் தண்ணீர் வற்றும். நாக்கு வறண்டு போவது, உதடுகள் வெடிப்பது, இதயத் துடிப்பு அதிகமாவது, சிறுநீர் அடர்த்தியாக வெளியேறுவது போன்றவையும் இதன் விளைவுகளே... நம்மில் பலரும் செய்கிற தவறு என்ன தெரியுமா? தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது. அப்படியில்லாமல் அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழக வேண்டியது அவசியம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு டீஹைட்ரேஷன் பிரச்னை ரொம்ப கலபமாக வரலாம். அதன் அடுத்த விளைவாக நுரையீரல் புற்று நோய் தாக்கலாம். புகையை நிறுத்துவதும், அதிக தண்ணீர் குடிப்பதும்தான் தீர்வு.

எப்படி குடிப்பது?
** தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானாலும் எல்லோராலும் வெறும் தண்ணீரைக் குடிக்க முடியாது. சிலருக்கு தண்ணீர் குடிப்பதென்றாலே வாந்தி வரும். என்ன செய்ய? ஒரு லிட்டர் தண்ணீரில் கால் முடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அவ்வப்போது குடிக்கலாம்.

** 100 மி.லி கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு நீர் மோர் ஆக்கி அடிக்கடி சிறிது சிறிதாக குடிக்கலாம்.

** சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். சுவையாகவும் இருக்கும். செரிமானத்துக்கும் நல்லது.

** உடல் வறட்சியைப் போக்க இளநீரைப் போன்ற மகத்தான திரவம் வேறில்லை. வெயிலின் கடுமையை விரட்ட குளிர் பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து இளநீர் குடிப்பதே சிறந்தது.

சத்து?
இத்தனை மகிமை வாய்ந்த தண்ணீரில் ஏதேனும் சத்துகள் இருக்கிறதா எனப் பார்த்தால் இல்லை. ஆனால் தண்ணீர் அதிகமுள்ள காய்கறி, பழங்களுக்குப் பஞ்சமே இல்லை. அவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும். காய்கறி, பழங்களில் உள்ள சத்துக்களும் உடலுக்குப் போகும். பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளிலும் தர்பூசணி, கிர்ணி, பேரிக்காய் போன்ற பழங்களிலும் தண்ணீர் அதிகம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வறட்சியும் போகும்.வைட்டமின் சி சத்தும் சேரும்.

குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?


அப்படியெல்லாம் இல்லை, குளிர்ந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும். அதை நம் உடல் தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித் தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால் கொழுப்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இது தான். வெந்நீரை தனது வெப்பநிலைக்கு மாற்றும் வளர்ச்சியை  மாற்ற இயக்கம் அதிகரிப்பதால் உடலில் கொழுப்பு தங்குவதில்லை.

யாருக்கு தண்ணீர் கூடாது?

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதய நோயாளிகளுக்கு (இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை 30க்கும் குறைவானால்) நாள் ஒன்றுக்கு 1000 மி.லி தண்ணீர் மட்டுமே அனுமதி அது அவர்கள் மருந்து எடுத்துக்கொள்ள சமைக்க என எல்லாம் அடங்கியது. அளந்து அளந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கிட்னி பாதித்தவர்களுக்கு, பாதிப்பின் தீவிரம் பொறுத்து தண்ணீரின் அளவு 500 மி.லி வரை குறைக்கப்படவும் கூடும்.

குழந்தைகளுக்குத் தண்ணீர்?
பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள் பள்ளிக் கழிவறையின் சுகாதாரமற்ற சூழலுக்குப் பயந்து சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க தண்ணீரே குடிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு தண்ணீரே குடிக்காமலும் சிறுநீரை அடக்கியும் பழகினால் மிக இளம் வயதிலேயே யூரினரி இன்ஃபெக்ஷன் வரும். சிறுநீர் கழிக்கும் போது வழி கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறுவது அடர்த்தியாக, அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்றவை இன்ஃபெக்ஷனுக்கான அறிகுறிகள். அந்த அளவுக்குப் போக விடாமல் முன் கூட்டியே அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழகுவது ஆரோக்கியமானது.

நீக்கலாம்... தடுக்கலாம்!



நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களுக்கு ஒரு விஷயத்தில் அதை வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்!

பெண்மைக்குப் பெரிய சவாலான இந்தப் பிரச்சனைக்கு வாக்சிங், திரேடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு அழகுத் துறையில். அத்தனையும் பாதுகாப்பானவையா என்பது தான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்கவும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.

" பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னை தான் இது. ஹார்மோன்களின் இயக்கம் சீராக இல்லாமல் போவதே முக்கிய காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசிஓடி எனப்படுகிற மருத்துவப் பிரச்னை என வேறு காரணங்களும் இதன் பின்னணியில் உண்டு. இள வயதிலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

**பியூமிஷ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த பியூமிஷ் ஸ்டோனில் தடவி வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்கவும். கடலை மாவு, பார்லி பவுடர், தேன் மூன்றும் தலா 1 டீஸ்பூன் அளவு எடுத்து சில துளிகள் தண்ணீர் வீட்டுக் கெட்டியாகக் குழைத்து ரோமம் நீக்க வேண்டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, அது காய ஆரம்பித்ததும், தண்ணீரை தெளித்து சந்தனம் தடவி வைத்த பியூமிஷ் ஸ்டோனால், மிக மென்மையாக ரோமத்தின் எதிர் திசையில் தேகாவும். பிறகு அந்த இடத்தைக் கழுவவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி வளர்ச்சியின் வேகம் குறைந்து, வேர்க்கால்கள் பலவீனம் அடையும்.

**விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து சம அளவு எடுத்து கலந்து நீர் விட்டு பேஸ்ட் போலச் செய்து உடல் முழுக்கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு எதிர் திசையில் தேய்த்துக் குளிக்கவும். எரிச்சலாக உணர்ந்தால் குளிர்ந்த பாலோ, தயிரோ, தேங்காய் எண்ணெயோ தடவிக் குளிக்கலாம்.

**பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும் போதே சருமத்தில் நிறைய ரோமங்கள் இருப்பதைப் பார்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன் வெல்லத் தண்ணீர் கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைகளின் முதுகில் தடவி, காய்ந்ததும் மேன்மையாக உரித்தெடுத்து விடலாம். தொடர்ந்து இப்படிச் செய்தால் பெண் குழந்தைகள் பருவமடையும் போது ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.

**சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடியின் வேரைக் காய வைத்து அரைத்த தூள் எல்லாம் சம அளவு கலந்து கொள்ளவும். தினமும் குளிக்கும் போது மஞ்சள் மாதிரி இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளித்தால் ரோம வளர்ச்சி கட்டுப்படும்.

செய்யக்கூடாதவை....

**சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிலக்கு சுழற்சிதான். அது சரியில்லாமலிருப்பது உடலில் ஹார்மோன் கோளாறு இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகிச்சை.

**கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோகித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால், ரோமங்களை நீக்கிய இடம் தடித்து கருப்பதுடான் ரோம வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும்.

**கெமிக்கல் கலந்த ஹேர் ரிமுவிங் கிரீம்களை உபயோக்கிப்பதும் ரோம வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

**ஏற்கனவே கிரீம் மாதிரியானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்களுக்கு சருமத்தின் சில இடங்களில் கரும்புள்ளிகள் மாதிரி நின்று விடும். 

**பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத் தெரியாமல் தற்காலிகமாக மறைக்கப்படும். ஆனால் பிளீச்சின் தீவிரம் குறையக் குறைய அதாவது நான்கைந்து நாள்களில் மறுபடி ரோமங்கள் தம் பழைய நிறத்துக்குத் திரும்பும் . கெமிக்கல் கலந்த கிரீம் கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கும் கேடு.

Wednesday, December 11, 2013

கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள்!



சுக்கு:-


 
தமிழ்நாட்டில் மஞ்சளுக்கு அடுத்து சுக்கு இரண்டாவது மருந்தெனக் கூறலாம். 'சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமில்லை' என்று ஒரு பழமொழியே உண்டு. பசிமந்தம், நெஞ்செரிச்சல், புளியேப்பம், வாய்வு வலி, வயுற்று உப்புசம், ஒற்றை தலைவலி, வீக்கங்கள் முதலிய நோய்களுக்கு சுக்கு பலவிதங்களில் பயன்படுகிறது. பச்சை சுக்கைப் பொடித்து சம அளவு பனைவெல்லம் கலந்து சாப்பிட நீர் பேதி கட்டுப்பாடும். சுட்ட சூக்கைப் பொடித்‌து நெய் சிறிதளவு சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வயுற்று உப்புசம்- மலக்கட்டு நீங்கும்.

திப்பிலி:-
இவற்றில் அரிசி திப்பிலி, யானை திப்பிலி என இருவகைப்படும். மேகக் கட்டிகள் கோழை போன்றவற்றையும் வயிற்று உப்புசத்தையும் நீக்கக் கூடியது,

கருஞ்சீரகம்:-

 
சூதகக் கட்டை நிக்கும் தன்மை கொண்டது. வயதுக்கு வராத பெண்களுக்கு கருஞ்சீரகம், மாவிலைப்பட்டை, சிறிதளவு எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து சிறு உருண்டை மூன்று வேளை கொடுக்க, பலன் காணலாம். தலையில் ஏற்படும் சொறி, சிரங்குகள், மூக்கிலிருந்து கட்டி கட்டியாக சளி வருதல், கண் சம்பந்தமான நோய்களை விரட்டக் கூடியது கருஞ்சீரகம்.

வசம்பு:-

இது குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த சஞ்சீவி எனலாம். பேதியானால் வசம்புவைக் கருக்கி தேனில் குழைத்து சிறிது கொடுக்கலாம். குழந்தைகளின் சூட்டிற்கு கருகிய வசம்பை வெந்நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி தடவலாம். அதிக அளவு வசம்பை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. வசம்பை குழந்தையுள்ளவர்கள் கைவசம் வாங்கி வைத்திருப்பது நல்லது.

அதிமதுரம்:-

 

முத்தோஷங்களால் ஏற்படும் கபக் கட்டுகளை நீக்கும். கண் நோய், ஆசனவலி, ஜீரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். நாவறட்சி, சிறுநீர் எரிச்சல், மதிமந்தம் போன்றவற்றை நீக்கும் குணம் கொண்டது. அதிமதுரத்தை சிறிதளவு நாவில் அடக்கி கொண்டால் பற்கள் உறுதி பெரும். நாவறட்சி தீரும். சூட்டை தணிக்கும்.

கிராம்பு:-

 
இது பல்வலியைப் போக்கக் கூடியது சிறந்த மருந்தாகும். கிராம்பையும், உப்பையும் பொடித்‌து பல்வலி, இருவலியுள்ள இடங்களில் வைத்து அழுத்த உடனடியாகக் குணம் காணலாம். கபக்கட்டு, குக்கிருமலைப் போக்கும் சக்தி கொண்டது. உணவுக்கு சுவை கூட்டும். ஜீரண சக்தி உண்டாகும்.

கடுக்காய்:-

 
இதில் கடுக்காயின் பிரிவு ஏழு என்று வைத்திய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூரத்துக் கடுக்காய் என்னும் சிவப்புக் கடுக்காய் சிறந்த பலன் அளிக்கக் கூடியது. ஈளை, இருமல், கபக் கட்டுகளை நீக்கக் கூடியது. குடலை சுத்தி செய்து மலக்கட்டைப் போக்கும். இரணங்களை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. படைகளுக்கு கடுக்காயைத் தாய்ப்பாலில் உரசிப் போட்டு வர படை விரைவில் நீங்கும்.

ஜாதிக்காய்:-

 
மூச்சடைப்பு, தலைவலி, அதிக தாது வெளிப்படுதல் போன்றவற்றைக் குணப்படுத்தும். இருமல், உடல் சூட்டைத் தணிக்கும்.