Pages

Saturday, June 21, 2014

உபயோகமான சமையல் குறிப்புகள் - பாகம் 2

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

 துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துச் சமைக்க வேண்டும்.

குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

உபயோகமான சமையல் குறிப்புகள் - பாகம் 1

  • பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
  • வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
  • சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

  • சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
  • தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
  • உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
  • கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
  • ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
  • தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
  • பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

Wednesday, June 18, 2014

இளமை காக்கும் தேன்

தேன்
அடிக்கடி தேன் உட்கொண்டு வந்தால் இளமை காக்கப்படும் என்பது பாரம்பரிய மருத்துவ நிபுணர்களின் கருத்து. தேன் வழங்கும் பிற நன்மைகளையும் பார்க்கலாம்...

* உடல் ஆரோக்கியத்துக்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச்சதை குறையும், உடல் உறுதி அடையும்.

* தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜல தோஷம், தலைவலி குணமாகும்.

* தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

* தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

* இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லி கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

* தேனுடன் மாதுளம் பழச் சாறை சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இதய நோய்கள் தீரும்.

* உடம்பில் ரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

* தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச, கட்டிகள் பழுக்கும்.

* மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறி விடும்.

* கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்துசாப்பிட, கீல் வாதம் போகும்.

நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா?

உணவு
'ஏன் சாப்பிடுகிறோம்?' என்று கேட்டால், 'பசிக்கு' என்று பதில் வரும். ஆனால் பசியைத் தாண்டி, நோய் நொடியின்றி வாழ்வதற்கும் அடிப்படையாக நாம் உண்ணும் உணவு இருக்க வேண்டும். அதற்கு, நாம் உண்பது 'ஆரோக்கிய உணவாக' அமைய வேண்டும்.

ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு வகைகள்தான். கட்டாயத்தின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? நிச்சயம் இல்லை.

பின் எவைதான் ஆரோக்கிய உணவு? நாம் உண்ணும் அனைத்திலும் பல சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவை யான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும்.

நாம் விரும்பி உண்ணும் உணவையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவை கூட்டுவது அல்லது குறைப்பதன் மூலம் ஆரோக்கிய உண வாய் மாற்றிக் கொள்ள முடியும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்: நம் உடல் நிலைக்கு ஏற்றது, தேவையான சத்துக்கள் நிறைந்தது, அளவோடு உண்பது.

என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவாக எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம்.

ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்குப் பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் அவரவரின் உடல் நிலை குறித்த முழுமையான விவரங்கள் தேவைப்படும். எனவே ஒவ்வொருவரும் தமது உடல் குறித்த உண்மையான நிலையை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருப்பது மிகவும் அவசியம்.

உங்களது எடை மற்றும் உயரத்தை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக்கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு உங்களின் எடை, உங்களது உயரத்தைப் பொறுத்து ஆரோக்கியமானது தானா என்பதைத் தெரிந்துகொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (body mass index) பயன்படுத்துங்கள்.

உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்துக்கான வாய்ப்பு முதலிய விவரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்வி களுக்கும் பதில் அறிந்துகொள்ளவும். உங்களது உடல் குறித்த விவரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.

உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும். ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, ஆணா, பெண்ணா, எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது.

ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி (கலோரி) தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தை அமைத்துக் கொள்ளலாம். நாம் ஆரோக்கியமாக வாழ இந்த அடிப்படையான விஷயங்களை அறிந்து நடப்பது அவசியம். 

Sunday, June 15, 2014

பாரம்பரிய அழகுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்!

பாரம்பரிய அழகுக் குறிப்பு
சீயக்காய் தேய்த்துக் குளிப்பது, விளக்கெண்ணெயைக் கண்களில் விட்டுக் கொண்டு தூங்குவது, மஞ்சள் பூசுவது போன்ற பாரம்பரியமான பல  அழகு-ஆரோக்கியப் பழக்கங்கள் இன்று இல்லை. காணாமல் போன அவற்றுடன் சேர்ந்து நாம் தொலைத்தது நம் அழகையும் இளமையையும்தான்.  அந்தக் காலத்தில் பின்பற்றிய எந்த விஷயமுமே அர்த்தமற்றவையல்ல என்பதைக் காலம் கடந்த பிறகுதான் உணர்கிறோம். ஆனாலும், இதுவும்  தாமதமில்லை... பாரம்பரிய அழகுக் குறிப்புகளைப் பின்பற்றும் உங்கள் முயற்சியை இன்றிலிருந்தே தொடங்குங்கள்!

எல்லோருக்கும் பயன்படக்கூடிய அத்தகைய அழகுக் குறிப்புகள் சிலவற்றை விளக்குகிறார் அழகியல் ஆலோசகர் ராஜம் முரளி.
அந்தக் காலத்தில் காலையில் எழுந்ததுமே, கொல்லைப் பக்கத்துக்குப் போய், அங்குள்ள புல் தரையில் கால்களை நன்கு தேய்த்துக் கழுவுவார்கள்.  அந்தப் புல்லின் சாறு பட்டால், கால்கள் சுத்தமாவதுடன், வெடிப்புகள் வராமல் தடுக்கும். இன்றோ கால் கழுவுகிற பழக்கமே இல்லை. அதனால்தான்  சிறுவயதிலேயே பாதங்கள் வறண்டு, வெடித்துக் காணப்படுகின்றன.

உங்கள் வீட்டுக் குளியலறையில் கரகரப்பான கல் ஒன்றைப் பதித்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போதும், ஒவ்வொரு முறை கால்களைக் கழுவும்  போதும், அந்தக் கல்லில் தேய்த்துக் கழுவலாம். பாதங்கள் பட்டுபோல இருக்க வேண்டும் என விரும்பினால், அந்தக் கல்லை நன்கு  சுத்தப்படுத்திவிட்டு, அதிலேயே நல்ல மஞ்சளை இழைத்துவிட்டு, அதன் மேல் கால்களைத் தேய்த்துக் கழுவலாம்.

ஆரோக்கியத்துக்காக நிறைய பேர் தினமுமோ, அடிக்கடியோ இளநீர் குடிக்கிறார்கள். 30 ரூபாய் கொடுத்து வாங்கும் இளநீரில் தண்ணீரை மட்டும்  குடித்துவிட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையை கஷ்டப்பட்டு சாப்பிடுவது அல்லது தூக்கி எறிவதும்தான் நடக்கிறது. அதற்குப் பதில் அந்த  வழுக்கையை அரைத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளித்தால் சருமம் பட்டு போல மென்மையாகும்.

தோட்டம் வைத்துப் பராமரிக்கிற அளவுக்கு இன்று யாருக்கும் இட வசதியோ, நேரமோ இல்லை. ஆனாலும், சின்னச் சின்ன தொட்டிகளில் திருநீற்றுப்  பச்சிலை, துளசி, நித்ய கல்யாணி போன்றவற்றை வைத்துப் பராமரிக்கலாம். இவற்றுக்கு மருத்துவக் குணங்கள் உண்டு. துளசி மற்றும்  நித்யகல்யாணியிலிருந்து வீசும் காற்றானது நம் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.

சாம்பிராணி போடுவது இன்று சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. தரமான சாம்பிராணியை வாங்கிப் பொடித்து, அத்துடன் சந்தனக் கட்டையின் சீவல்  (கிடைத்தால்) சேர்த்து தணலில் போட்டுப் புகைய விட்டு, ஒரு மூங்கில் கூடையால் கவிழ்த்து விடவும். 200 மி.லி. நல்லெண்ணெயில் பாதியை  தலைக்கும், மீதியில் மஞ்சள் குழைத்து உடல் முழுவதிலும் தேய்த்து ஊறியதும், வெந்நீரில் குளிக்கவும். புகை வருகிற கூடையின் மேல் தலை  முடியை விரித்தபடி காட்டவும். சாம்பிராணிப் புகையானது கழுத்திலும் மண்டையிலும் உள்ள நீரை எடுக்கும். அந்த வாசனை நல்ல, ஆழ்ந்த  உறக்கத்தைக் கொடுக்கும்.

அந்தக் காலத்தில் எல்லாம் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவென சிறப்புப் பொருட்கள் ஏது? பால் காய்ச்சியதும் படிகிற ஏட்டில், சிறிது  புளிப்பான தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதில் சிறிது கடலை மாவையும் சேர்த்துக் குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து விடுவார்கள். இது  சருமம் வறண்டு போவதைத் தடுத்து, சருமச் சுருக்கங்களையும் தள்ளிப் போடும்.

வெண்ணெய், தயிர், பாலாடை, சிறிது கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றுடன் சில துளிகள் பாதாம் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ கலந்து உடல்  முழுக்கத் தடவி, சிறிது நேரம் ஊறியதும் குளிக்கலாம்.

அரப்புத்தூள் என நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்குப் பச்சையாக இருக்கும். ஒரு பங்கு அரப்புத்தூளுடன், 1 பங்கு சீயக்காய் தூள்  கலந்து தலையில் எண்ணெய் வைத்தோ, வைக்காமலோ, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகும். இன்று யாரும் கஞ்சி  வடித்தெல்லாம் சாதம் வைப்பதில்லை. தலைக்குக் குளிக்கிற நாட்களில் மட்டும், கைப்பிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, நிறைய தண்ணீர்  விட்டு, வெந்ததும் கஞ்சியை வடித்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாவதுடன் வளர்ச்சியும் தூண்டப்படும்.

விளக்கெண்ணெயில் திரி போட்டு விளக்கேற்றவும். சந்தனத்தூளைக் கரைத்து ஒரு தட்டில் தடவி, அதை விளக்கின் மேல் கவிழ்த்துப் போட்டு, புகை  அதில் படியும்படி வைக்கவும். அதில் படிகிற கருமையான படிவத்துடன், சிறிது விளக்கெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம்.  இந்தக் கண் மையில் ஒவ்வாமை என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்களுக்கும் குளிர்ச்சி. கண்கள் பளபளப்பாகும்.

வெற்றிலைப்பாக்கு போடுகிற பழக்கமும் இன்று மறைந்து வருகிறது. அந்தப் பழக்கம் இருந்தவர்களுக்கு அதிலுள்ள கால்சியம் சத்து காரணமாக  மூட்டுவலிகள் வராமலிருந்தது. வெற்றிலை போடுகிற பழக்கமுள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கும் கால்சியம் குறைபாடு வராது. அஜீரணத்துக்கும்  நல்லது... அழகுக்கும் உதவும்.

Wednesday, June 11, 2014

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்....!

தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

முருங்கைக்கீரை
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள், வடிகட்டியபின் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும். பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

Tuesday, June 3, 2014

அயோடின் உப்பையும் அளவுடன் பாவிப்போம்!!

 மனித உடலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு உணவுப் பொருள் சோடியம் குளோரைடு எனப்படும் கறி உப்பு ஆகும்.

மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள் தற்போது அதிகரித்ததன் காரணங்களில் உப்புப் பாவனையும் முக்கியமானது.

நாம் உட்கொள்ளும் உப்பை சிறுநீரகங்கள்தான் வெளியேற்ற வேண்டும். சிறுநீரகங்கள் 05 கிராம் உப்பை மட்டுமே வெளியேற்ற முடியும். அப்படியானால் மீதமுள்ள 07 கிராம் உப்பும் உடம்பில் சேர்கிறது.

ஒரு பங்கு உப்பை வெளியேற்ற 23 பங்கு தண்ணீர் தேவை. கலங்களில் உள்ளே இருக்கின்ற நீர் வெளியேறி, கலங்களுக்கு வெளியே உள்ள இந்த உப்பைக் கரைக்கிறது. ஆகவே, உடலில் கலங்களுக்கு வெளியே நீரின் அளவு மிகுதியாகி வீக்கம், இரத்தக் கொதிப்பு, இதயம் செயல் இழப்பு முதலியவை நிகழ்கின்றன.

சோடியமானது தன்னோடு கல்சியத்தையும் தக்க வைத்துக்கொள்ளுவதால் இரத்தக் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் முதலியவை உருவாகும்.  புற்றுநோய்களும் வரக்கூடிய வாய்புண்டு.

கனிமங்கள்,  தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் முதலிய சுமார் 84 வகை ஊட்டச் சத்துக்கள் தினமும் நமக்குத் தேவை.

உடலுக்குத் தேவையான உப்பு, உணவில் இயற்கையாகவே இருக்கிறது.

 எப்போது சமையலறையிலும் இன்னும் போதாது என்று சாப்பாட்டு மேசையிலும் வைத்து உப்பை நாம் உண்ண ஆரம்பித்தோமோ அன்றுதான் அதிலிருந்தே மனிதனின் உடல் ஆரோக்கிம் கெட்டுப்போக ஆரம்பித்து விட்டது.

'ரீஃபைனிங்' என்கிற பெயரில் அரிசி, சீனி, சர்க்கரை,  பால் இதையெல்லாம் எப்படிக் கெடுத்தோமோ அதேபோலதான் உப்பையும் கெடுக்க ஆரம்பித்தோம்.

கடல் நீரைத் தேங்க வைத்து, காயவைத்துக் கிடைக்கும் உப்பையே பெரும்பாலும் உபயோகித்து வருகிறோம். நமக்கு இப்போது கிடைக்கும் உப்பு
( Table salt ) கெடுதல் விளைவிப்பதில் சீனிக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல.

எல்லாவற்ற்றிற்கும் மேலாக, இப்போது வந்துள்ள புதிய ஆபத்து, அயோடின் கலந்த உப்பு  ஆகும். உப்பில் இயற்கையாகவே அயோடின் உண்டு. அதைக் காய்ச்சி உறிஞ்சி எடுத்துவிட்டு,   அயோடின் சேர்க்கிறோம் என்று செயற்கையாக அயோடின் சேர்க்கப்படுகின்றது.

தைராய்டு சுரப்பியிலிருந்து, தைராக்ஸின் ஹோர்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன் கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் ( Goitre ) முதலிய குறைபாடுகள் தோன்றும்.

ஆகவே, அயோடின் மிக மிக அவசியம்.

ஆனால், வெறும் 0.15 மி.கி. அயோடின் மட்டுமே  சாதாரண ஒருவருக்குதத் தேவைப்படுகிறது. இந்த அளவு அயோடின் எல்லா காய்கறிகளிலும் பால், முட்டை, அசைவ உணவிலும் இயற்கையாகக் கிடைக்கிறது. போதாக்குறைக்கு இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலும் கிடைக்கிறது.

இதுதவிர, அயோடின் கலக்கும்போது கூடவே பொட்டாசியம் குளோரைடு, சல்ஃபர்,  மெக்னிஷியம், ஃபுளோரைடு, பேரியம், ஸ்ட்ரோன்ஷியம் முதலிய வேதிப்பொருட்களும் கலந்துவிடுகின்றன.

இவை தேவையே இல்லை. இயற்கையான அயோடின் நல்லது. செயற்கையான அயோடின், உடலில் பல அழற்சிகளை உண்டாக்கும்.

ஆகவே அயோடின் உப்பையும் அளவுடன் பாவிப்போம். அதுவே ஆரோக்கியத்தின் அவசியமும் ஆகும்.