Pages

Sunday, April 6, 2014

குழந்தை பிறந்த பின் அவசியமாகும் உடற்பயிற்சி - 200 Post

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும், வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது முதல் கடமை ஆகும். அதேபோல குழந்தை பிறந்த பின்னர் அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவதற்கும், தன்னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போதாது. மருத்துவருடைய ஆலோசனையின்படி உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். ஒரு தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அவள் குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
உடற்பயிற்சி


அதிலும் குறிப்பாக பிரசவமான பெண்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல், வெளி ஆரோக்கியத்தையும் அதாவது உடற்பயிற்சி மூலம் உடல் அமைப்பையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாம்பத்தியமும் தடுமாறாமல் செல்லும்.

என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்?

* சுகப்பிரசவம் எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். தற்பொழுது அந்தப் பயிற்சிகளைச் செய்தால்தான் 50, 60 வயதுகளில்கூட பிறப்புறுப்பின் ‘தசைகள்’ வலுவாக இருக்கும்.

* உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.

* அறுவைசிகிச்சை பிரசவம் எனில் 2 மாதத்துக்கு அப்புறம்தான் உடல் நார்மலுக்கு வரும். அதற்குப் பின் பயிற்சிகள் செய்யலாம்.

மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் நாட்டு வைத்தியம்

• ஆற்றுத் தும்பட்டியை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் குன்மகுடோரி மெழுகைக் கடைகளில் வாங்கிப் பட்டாணி அளவு சாப்பிட்டால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும்.

• இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

• இத்திப் பிஞ்சை, சீரகம் சேர்த்து அவித்து சாப்பிட்டால் அதிக ரத்தப்போக்கு குறையும்.
நாட்டு வைத்தியம்


• இம்பூறல் வேர்ப்பட்டை 10 கிராமுடன் பெருங்காயம் ஒரு கிராம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

• கல்யாண முருங்கை இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

• பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

சுகப்பிரசவத்திற்கு மூச்சுப்பயிற்சி

கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும் என்கின்றனர் மருத்துவர்கள்.

முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். பெரும்பாலும் அது வலி மிகுந்த தசை இறுக்கமாகவே இருக்கும். பிறப்புறுப்பில் இருந்து ரத்தத்துடன் கூடிய திரவம் வெளிப்படும். இந்த அறிகுறிகள் பிரசவ காலத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே வலி மிகுந்த அந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூச்சுப்பயிற்சி


மூச்சுப் பயிற்சியின் போது பிரச்சினைக்குரிய எதைப்பற்றியும் நினைக்காமல் உங்கள் மனதை ஒரு நிலைபடுத்த வேண்டும்... ஒவ்வொரு முறை மூச்சை வெளி விடுவதில் மட்டும் நீங்கள் உங்கள் நினைப்பை ஒரு முக படுத்த வேண்டும்..மூச்சை உள்ளிழுத்தல் தானாக நடக்கும். மூச்சை உள்ளிருக்கும் போது அவரவருக்கு பிடித்தமானவற்றை நினைத்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஏதாவது ஒரு பெயரை சொல்லியபடி, அல்லது உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரைச் சொல்லியபடி பயிற்சி எடுக்கலாம். உங்கள் நினைப்பை அலைபாய விடாமல், இந்த பயிற்சியை ஒரு சீரான ஓட்டத்தில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை மெதுவாக உள்ளிழுக்கும் பொழுது ஒன்றில் இருந்து உங்களுக்கு எத்தனை எண் மனதில் தோன்றுகிறதோ அதை எண்ணவேண்டும். அதே அளவு எண் கணக்கை நீங்க மூச்சினை வெளியில் விடும்போதும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்க மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூன்று வரை எண்ணினால் மூச்சை வெளியில் விடும் பொழுதும் அதே மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும்..

முடிந்தவரை மூக்கின் வழியாக மூச்சு உள்ளிழுக்கவும் வாய் வழியாக மூச்சை வெளி விடவும் முயற்சிக்க வேண்டும்.. அவ்வப்பொழுது தொண்டை காய்ந்து போகாமல் இருக்க சிறிது தண்ணீர் பருகவும். இந்த மூச்சு பயிற்சியை கர்ப்ப காலத்தில் இருந்தே செய்து பயிலுங்கள்...பிரசவ வலியின் பொழுது இந்த பயிற்சி மிகவும் உதவும். எளிதாய் சுகப் பிரசவம் நடக்கும்.

Saturday, April 5, 2014

வெயிலுக்கு இதமான மோர்

மோர்
கோடைகாலம் வந்தாலே விதம் விதமாக குளிர்பான விளம்பரங்கள் கலக்கி எடுக்கும். ஆனால் உண்மையான இயற்கை குளிர்பானத்தை நாம் மறந்து விடுகிறோம். ஏழைகளின் சக்தி என்று கருதப்படுவது, நீராகாரம். முதல் நாள் வடித்த சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை மறுநாள் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது தான் நீராகாரம்.

அதில் உள்ள சத்துக்களை எந்த நவீன மருந்தும் தர முடியாது. அதே போன்ற மற்றொரு சத்தான பானம், மோர்,பாலை உறை ஊற்றி கிடப்பது தயிர். இந்த தயிரை மத்து கொண்டு கடைந்து வெண்ணெய் சத்தை பிரித்து எடுத்துவிடவேண்டும்.

கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைத்தபின் மோர் கிடைக்கும் இதனுடன், கறிவேப்பிலை,மல்லிதழை,இஞ்சி,பச்சை மிளகாய், போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது சுவையான மோர் தயார். மோரில் பொட்டசியம், வைட்டமின் பி12,கால்சியம்,ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரம் சத்துக்கள் நிறைந்துள்ளன. புளிப்பு,உப்பு,காரம், உவர்ப்பு என நான்கு சுவைகளையும் மோர் தரக்கூடியது. நீர் மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது.

பசியின்றி வயிறு திம்மென்று இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோர் ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசி எடுப்பதை உணர முடியும். கொளுத்தும் வெயிலில் சுற்றிவந்த பின் உடலில் உள்ள நீர்சத்து முழுமையும் ஆவியாகி விடும்.

அப்போது ஒரு டம்ளர் மோர் (முடிந்தால் மண்பானை தண்ணீர் சேர்த்து) குடித்துப்பாருங்கள். உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவதை நன்றாக உணர முடியும். இது எந்த குளிர்பானத்திலும் கிடைக்காத ஒன்று, வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம்.

உடல் சூட்ட தணிக்கும். கோடைகாலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்து விடும். அதற்கு தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும் வரை மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும். குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சமாச்சாரங்கள் எதுவும் இன்றி கிடைக்கும் மோர் அருந்தி இயற்கையோடு இசைந்து வாழ்வோம்.

மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்

நாவல் பழம்
நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

சோர்வை போக்கும் அழகு குறிப்புகள்

அழகு
கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல் தோன்றுகிறதா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.

* வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

* முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும் முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.

* ஒரு வைட்டமின் மாத்திரை, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். பயணம் முடிந்து சோர்ந்து வரும்போது உருளைக்கிழங்கு சாறு, பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றை முகத்தில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது.

* ஒரு தேக்கரண்டி கோதுமையை வறுத்து அரைத்து, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசுவதும் முகத்தை பளிச்சென்று மாற்றும்.

* வெள்ளரிக்காயை கொத்தி நறுக்கி சிறிது நேரம் பிரிஜ்ஜில் வையுங்கள். குளிர்ந்த பின்பு கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வையுங்கள்.

* பால், மினரல் வாட்டர், சிறிய ஐஸ் துண்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி இமைகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம். பன்னீரில் பஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

* எலுமிச்சை இலைகளை இடித்து தண்ணீரில் போட்டு சூடாக்கியும் குளிக்கலாம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்பு தலைக்கு குளித்தாலும் உற்சாகம் கிடைக்கும்.

* ஆமணக்கு எண்ணெயை தலையில் இரவில் தேய்த்து, காலையில் பயறு தூள் பயன்படுத்தி தலையை கழுவி குளிப்பதும் நல்லது. தேங்காய் பாலை தலையில் தேய்த்து, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு குளித்தாலும் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

வயதானலும் அழகாக இருப்பது எப்படி
சிலர் நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிப்பார்கள்.  இதற்கு வெளித்தோற்றம் மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதால், இந்த இளமைத் தோற்றம் கிடைக்கிறது. அந்த வகையில் நீங்கள் நாற்பது வயதை கடந்தவரா? நாற்பது வயதிலும் துடிப்பாகவும், இளமையாகவும் இருக்க விரும்புபவரா? அப்படியெனில் ஐம்பது வயதிலும் அழகாக தோற்றமளிப்பதற்கான சில வழிகள் இதோ...

• உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.

• தலைமுடியை சரியாக கவனிக்க வேண்டும். தலைமுடிக்கு டை அடிக்க விரும்பினால் அதன் வண்ணத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவும். சாதரணமாக 60-வயதை கடந்த பின்னர் டை அடிப்பது செயற்கையாகவே தெரியும்.

• தலைமுடியின் நீளத்தை கவனிக்கவும். குறைந்த நீளத்தையுடைய தலைமுடி அதிக நீளமுடைய தலைமுடியை விட நல்ல தோற்றத்தை கொடுக்கக் கூடியதாகும். பொதுவாகவே தோள்பட்டைக்கு மேலே முடி இருப்பது நன்கு பொருத்தமானதாக இருக்கும்.

• எடையை சரியாக பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.

• இந்த வயதில் அதிகப்படியான மேக்-கப் தவிர்ப்பது நல்லது. வயதாகும் போது குறைந்த அளவு மேக்-கப் தான் அழகாகவும், இயற்கையானதாகவும் இருக்கும். நல்ல வெளுப்பாக இருந்தால் கண்ணிமைகளுக்கும், கண்ணின் வெளிப்பகுதிகளுக்கும் பிரௌன் அல்லது கிரே நிறத்தில் வண்ணம் கொடுக்கலாம். கருமை நிறத்தில் இருந்தால், கருப்பு நிற மையை பயன்படுத்த வேண்டாம்.