Pages

Friday, December 6, 2013

சம்பங்கி பூவில் இத்தனை மகத்துவமா!

சம்பங்கி பூ


பூஜைக்கு உகந்த சம்பங்கிப்பூ, மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது. மயக்கும் நறுமணம் கொண்டது. சம்பங்கி பூவின் இதழ்களுக்கு, தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது. சம்பங்கி பூஜைக்கு ஏற்ற பூவாக மட்டும் இல்லாமல்,பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது.




சம்பங்கி தைலம்

அரை கிலோ தேங்காய் எண்ணையில், 50 கிராம் பூவை போட்டு நான்கு காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணைய்தான் 'சம்பங்கி தைலம்' என அழைக்கப் படுகிறது. இதனை உச்சி முதல் பதம் வரை நன்றாக தேய்த்தால் உடல் வலி தீரும். சம்பங்கி பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி, 20 கிராம் வெள்ளரி விதை, 20 கிராம் பயத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து முழுமுழுவென அரைத்து கொண்டால் பவுடர் ரெடி. இந்த தைலம் தேய்த்து குளிக்கும்போது, பவுடரையும் கலந்து குளித்தால் மேனி பளபளக்கும்.

பலன்கள்

நான்கு சம்பங்கி பூவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணைய் கலந்து அரைத்து, சூடு பறக்க நெற்றிப்பகுதியில் தடவி வந்தால் தலைவலி குறையும். ஒரு டம்ளர் நீரில் ஐந்து சம்பங்கி பூவை போட்டு, பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, அந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.

சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதை கண்களை சுற்றி பூசி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். கண்நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி போன்ற பிரச்னைகள்  தீரும். கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்கள் பளிச்சிடும் வகையில் இருக்கும். காய்ச்சிய பாலில் இரண்டு சம்பங்கி பூவை போட்டு ஆற வைக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் விதம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் உடல் தெம்பும், பலமும் பெரும்.

200 கிராம் நல்லெண்ணையுடன் 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு காய்ச்ச வேண்டும். இதில், சிறிது விளக்கெண்ணைய் கலந்து கணுக்கால் மற்றும் பாதத்தில் தடவி வந்தால் சொரசொரப்பு, வெடிப்பு மறையும். இதில் விளக்கெண்ணைய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து எலுமிச்சை சாறை கலந்து, ரசத்தை ஒரு பத்திரத்தில் ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இதை தினமும் காலை மாலை நேரத்தில் பாதத்தில் தடவி வந்தால் பாதம் மேன்மையாகும். சம்பங்கி இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவி வந்தால் பாதவலி நீங்கும்.

ஒரு கைப்பிடி சம்பங்கி பூவை, கொதிக்கும் நீரில் போட்டு வாரமிருமுறை ஆவி பிடித்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட பருக்கள், தழும்புகள் மறையும். சம்பங்கி பூ இரண்டு, தேங்காய் பால் இரண்டு தேக்கரண்டி அளவு கலந்து நன்கு அரைத்து முகத்தில் பூசினால் முகம் புத்துணர்ச்சி பெரும். இதுபோன்று பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன.

No comments: