Pages

Showing posts with label வாய்ப்புண். Show all posts
Showing posts with label வாய்ப்புண். Show all posts

Wednesday, April 1, 2015

இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?


 mooligai க்கான பட முடிவு

சுவிஸ் சாக்லெட், சிங்கப்பூர் சென்ட், சீன வாஸ்து என வெளிநாட்டு மோகம் நமக்கிருப்பது போல, சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்திய பாரம்பரிய மூலிகைகளின் மவுசு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய மூலிகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன!

அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவையும் பல முக்கியமான மூலிகைகளுக்கு நம் நாட்டையே சார்ந்திருக்கின்றன. நம் மக்களுக்கு அவற்றின் அருமைகள் புரியாதது பற்றியும், பாராம்பரிய மூலிகைகளின் சிறப்புகள் குறித்தும் விளக்குகிறார் சித்த மருத்துவர் எஸ்.ராமசாமி பிள்ளை.

‘‘சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகிய நான்கும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் அடங்கும். இதனை சுருக்கமாக ‘ஆயுஷ்’ என்றழைப்பார்கள். இவற்றில் இயற்கை மூலிகைகளே மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. இன்று பயங்கர நோய்களாக சொல்லப்படும் பலவற்றுக்கும் மருந்தாகும் மூலிகைகளை நமது முன்னோர் அன்றே ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

 நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல... நோய் எதனால் வருகிறது என்று அதன் மூலத்தையும் கண்டறிந்து, மறுபடி அது தலை தூக்கா மல் சரிப்படுத்துவதும் நம் பாரம்பரிய மருத்துவ முறையின் சிறப்பு. சித்த மருத்துவம் என்பது நமது மண்ணின் மருத்துவம். இதை மருத்துவமுறை என்பதை விட ‘வாழ்வியல் கோட்பாடு’ என்றே சொல்லலாம்.

நவீன மருத்துவத்தில் நோய் வந்த பிறகுதான் மருந்துகள் கொடுக்க முடியும். சித்த மருத்துவ மருந்துகளை நலமோடு இருக்கும் போதே உட்கொண்டு வந்தால், எந்த நோயும் வராமல் தடுத்துவிடலாம். நாவல் கொட்டை, சிறு குறிஞ்சால், ஆவாரம்பூ ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பொடியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். பொன்குரண்டியும், பூலா விருட்சமும் நேரடியாக நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வேலை செய்து நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையவை. புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தியும் இவற்றுக்கு உண்டு. காக்கட்டான், நீல அவுரி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, கரந்தை ஆகிய ஐந்து கர்ப்ப மூலிகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்களே வராது... மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும் என்கிறது சித்தர்களின் ஓலைச்சுவடி.

துளசி, திருநீற்றுப் பச்சிலை, ஆடாதொடா, தூதுவளை போன்ற மூலிகைகளை வீட்டிலேயே வளர்த்து பயன்பெறலாம். மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை பயனளிக்கும். நெஞ்சு சளியையும் குறைக்கும். வல்லாரை நல்ல தூக்கத்தை வரவழைக்கும். கண்டங்கத்தரியையும், முசுமுசுக்கையையும் உணவில் சேர்த்துக் கொண்டால் நாள் பட்ட சளியைக் கூட போக்கிவிடும். மணத்தக்காளி வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை குறைக்கும். இதில் உள்ள அல்கலைன் மலத்தை இளக்கிவிடும்.

உணவு செரிமானத்தையும் சரிப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டையும் சரியாக்கும். அசோக மரத்தின் பட்டைகள் பெண்களின் பிரச்னைகள் பலவற்றுக்கு மருந்தாகும். வீட்டிலேயே இவ்வகை மூலிகைகளை எளிதில் வளர்த்து உணவில் சேர்த்து வருவதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். இப்படிச் செய்யாமல், நோய் வந்த பிறகு ஆங்கில மருத்துவத்தை நாடுவதையே பெரும்பாலான மக்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதோடு, மாறிவரும் நவீனச் சூழலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையும் நோய்களை அதிகரிக்கின்றன.

நமது மூலிகைகளின் அருமை தெரிந்த வெளிநாட்டினரோ, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கின்றனர். அந்த மருந்துகள் அனைத்தும் வெளிநாட்டில் தயாரானவை என்ற லேபிளோடு மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் நமக்கே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்கள் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் இருந்து உயிர்காக்கும் மருந்துகள் வரை மார்க்கெட்டிங் செய்து மக்களை வாங்க வைத்துவிடுகிறார்கள். இது நம் மக்களுக்கு தெரிவதில்லை.

சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஜுரங்களுக்கு தகுந்த மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் கிடையாது. சித்த மருத்துவத்திலோ அப்போதே 64 வகை ஜுரங்களை வரையறுத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளனர். நில வேம்பு குடிநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, விஷ ஜுரத்துக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. நில வேம்பு குடிநீரின் மகத்துவத்தை இன்று ஆங்கில மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் மொத்தம் 4,448 நோய்களை, வாதம், பித்தம், கபம் என வகைப் பிரித்து, அதற்கான மருத்துவ முறைகளையும் சொல்லிச் சென்றுள்ளார்கள்.

பெரும்பான்மையானவர்கள் எல்லா வகை ஆங்கில மருத்துவ முறைகளையும் பார்த்து. சிகிச்சை பலனளிக்காமல் போனவுடன்தான் சித்த மருத்துவத்துக்கு வருகிறார்கள்.

அப்போது நோய் மிகவும் முற்றிய நிலையில் இருக்கும். அதனால் அந்த நிலையில் நோயை சரியாக்குவது சவால் நிறைந்த விஷயமாக மாறிவிடுகிறது. நோயின் ஆரம்ப நிலையில் வந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். எளிமையாக அனைவரும் பயன்பெறக்கூடிய பக்க விளைவில்லா மருத்துவம் சித்த மருத்துவம்...’’ என்று நமது பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தை விளக்குகிறார் சித்த மருத்துவர் ராமசாமி பிள்ளை.

Friday, August 8, 2014

இயற்கை தரும் ஆரோக்கியம்! - 300th Post

தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

 மூட்டு வலி குறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

 காதுவலி குறைய: கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

 கண் உஷ்ணம் குறைய: வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

 வாய்ப்புண் குறைய: பலா இலையை வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.