Pages

Showing posts with label நார்ச்சத்து. Show all posts
Showing posts with label நார்ச்சத்து. Show all posts

Wednesday, September 3, 2014

ஆரோக்கியமாக வாழ அளவாக சாப்பிடுங்கள்!


வயிறு நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை நமது முன்னோர்கள் அன்றே மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றார்கள். மூன்றில் ஒரு பங்கு தண்ணீர், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்ற அடிப்படையில் தான் நாம் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்பழக்கத்தை தொடந்து கடைப்பிடித்து வந்தாலே போதும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

இதனை கடைப்பிடிக்காத பட்சத்தில்தான் நோய்கள் எட்டிப் பார்க்கின்றன. அந்த வகையில் தவறான வகையில் தவறான உணவு பழக்க வழக்கத்தால் வருகின்ற பல நோய்களில், இருதய நோய் முக்கியமான இடத்தை வகிக்கிறது. பெரும்பாலும் இருதய நோய் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளால் தான் வருகிறது. அதற்காக கொழுப்பு தன்மையுள்ள உணவுகளை தவிர்த்து விடுவது பொருத்தமான தீர்வாக இருக்காது. அளவான, ஆரோக்கியமான முறையிலான உணவே, இதற்கு சரியான தீர்வாகும். உதாரணமாக கோழி இறைச்சியை சமைக்கும் போது, தோல் உட்பட கொழுப்புகளை முற்றிலும் அகற்றி விட வேண்டும்.

ஆட்டிறைச்சி சமைக்கும் போது, எண்ணெய் திரளும் கொழுப்புகளை அடியோடு அகற்றுங்கள். பெரும்பாலும் ஆட்டிறைச்சியை நன்றாக அவித்துவிட்டு சமைப்பதால் அதில் இருக்கும் அளவுக்கதிகமான கொழுப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை பொரியலுக்காக பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அளவுக்கு மீறி பட்டர், மாஜரின் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெய் மற்றும் கேக் போன்ற இனிப்புகளை வாங்கும் போதும், தயாரிக்கும் போதும் முடிந்தளவுக்கு கொழுப்பு தன்மையுள்ள சேர்மானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பச்சை மரக்கறி வகைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள் பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படுகிறது. சமைப்பதற்காக தேங்காய் எண்ணெய் உட்பட வேறு எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும், மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் அதிகமாக சேர்த்தால் தான் சாப்பாடு சுவையாக இருக்கும் என்பதெல்லாம் இல்லை.

சாப்பிட்ட பின்னர் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை முடிந்தவரைக்கும் தவிர்க்க வேண்டும். அதனால் உடற்பருமன் உங்களை அறியாமலேயே அதிகரிக்கும். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினசரி உணவு பழக்க வழக்கத்தை இவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டாலே, எந்த வகையிலும் இருதய நோய் உட்பட எந்தவொரு நோயும் நெருங்காது.

Sunday, April 27, 2014

பார்லியில் உள்ள சத்துப்பட்டியல்

பார்லி
பார்லி (வாற்கோதுமை) சத்துமிக்க தானிய வகைகளில் ஒன்று. இன்று நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகளின் பிரதான உணவு வகையில் ஒன்றாகவும், ஆரோக்கிய விரும்பிகளின் உணவுப் பட்டியலிலும் தவறாமல் இடம் வகிக்கிறது. இதிலுள்ள சத்துக்களை அறிவோம்...

* பார்லி மிதமான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் பார் லியில் 270 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* நூறு கிராம் பார்லியில் 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவும். குடல் பகுதியில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் இந்த நார்ச்சத்துக்களை எளிதில் கரையத்தக்க கொழுப்பு அமிலமாக மாற்றி வழங்கும். அது 'பியூட்ரிக் அமிலம்' எனப்படும். இது உடற்செல்களுக்கான அத்தியாவசிய எரிபொருளாகும்.

* நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் புரப்பியானிக் அமிலம், அசிட்டிக் அமிலம் எனப்படும் இரு கொழுப்பு அமிலங்களையும் உருவாக்குகிறது. தசை மற்றும் நுரையீரல் செல்களின் எரிபொருளாக இவை பயன்படும். இந்த புரப்பியானிக் அமிலம்தான் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் செயலிலும் பங்கெடுக்கிறது.

* பார்லியில் உள்ள 'பீட்டா குளுகான்' எனும் நார்ப் பொருள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை பித்தநீருடன் கலந்து, கழிவுப் பொருட்களுடன் சேர்த்து அகற்றிவிடுகிறது.

* பார்லியில் 'வைட்டமின் பி' (நியாசின்) நல்ல அளவில் காணப்படுகிறது. அதிக அளவில் பார்லியை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இதயவியாதியான கார்டியோ வாஸ்குலார் பாதிப்புக்கு நியாசின் எதிர்ப்பு ஆற்றல் வழங்கும். மேலும் கெட்ட கொழுப்புகளான லிப்போ புரோட்டின் மற்றும் கொலஸ்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தும். ஒரு கப் பார்லி சாப்பிட்டால் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய 'வைட்டமின் பி' சத்தில் 14.2 சதவீதம் கிடைக்கும்.

* உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள் சிறந்த அளவில் காணப்படுகிறது. செலினியம் தினசரி அளவில் 52 சதவீதமும், டிரிப்டோபான் 37.5 சதவீதமும், தாமிரம் 31.4 சதவீதமும், மாங்கனீசு 31 சத வீதமும், பாஸ்பரஸ் 23 சதவீதம் உள்ளன.

* காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். 40 வயது கடந்த பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு நன்மை வழங்கக் கூடியது பார்லி. மார்பக புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் தரும்.

* மிகுதியாக காணப்படும் மக்னீசியம், 300 நொதிகளை தூண்டும் துணைக்காரணியாக செயல்படுகிறது. இன்சுலின் சுரப்பதை தூண்டுவதால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருவதாகவும் உள்ளது.

வழக்கமாக பார்லி சேர்த்துவந்தால் ஆஸ்துமா பாதிப்புகள் அண்டாது. பார்லி தோற்றத்தில் கோதுமையின் சாயலில் இருக்கும். இதனை அப்படியே வேக வைத்து அரிசி சாதம்போல சாப்பிடலாம்.

கோதுமையைப் போலவே மாவாக அரைத்து சப்பாத்தி, கூழ், தோசை, இட்லி என பல உணவுப் பண்டங்கள் தயாரித்து ருசிக்கலாம். பார்லி மாவு கலந்து கேக், இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம். பார்லி சூப் உடலுக்கு தெம்பு தரும். இதயத்துடிப்பு சீராகும். மதுபானம் தயாரிப்பில் நொதித்தலுக்கு பார்லி உதவுகிறது. 

Saturday, April 26, 2014

வெல்லத்தின் வெகுமதிகள்!

வெல்லம்
வெல்லத்தின் வெகுமதிகள்!'இனிப்பு ஆபத்தானது' என்று பலரும் பலமுறை சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் விதிக்கும் தடைப் பட்டியலில் முதன்மையாக இருக்கிறது இனிப்பு.

ஆனால் அதேவேளையில், சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படும் வெல்லத்தில் அவ்வளவு பிரச்சினைகள் இல்லை. இன்றும் பல கிராமங்களில் காபி, டீ உள்பட எல்லாவற்றுக்கும் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்கிறார்கள்.

வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் பலர், உணவு உண்டபிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தைச் சரிசெய்யும் சக்தி வெல்லத்துக்கு உண்டு.

சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் வரக்கூடிய 'அசி டிட்டி' எனப்படும் அமிலம் சுரக்கும் பிரச்சினை, வெல்லம் சேர்த்துக்கொள்வோருக்கு வருவதில்லை. இது ரத்தத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனவே உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் எப்போதும் சிபாரிசு செய்வது வெல்லம்தான்.

வெல்லத்திலும், பனை வெல்லத்திலும் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகமாக உள்ளன. சர்க்கரை தயாரிப்பின்போது, அதை வெண்மையாக்குவதற்கு சில ரசாயனங்களைச் சேர்ப்பதால் இரும்புச் சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு இல்லை.

வெல்லம் என்று நாம் பொதுவாகச் சொல்வது, கரும்புச் சாறில் இருந்து தயாரிக்கப்படுவது. பனைமரத்தில் இருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் கரும்புச் சாறிலிருந்துதான் வெல்லமும், சர்க்கரையும் கிடைக்கின்றன.

தண்ணீர்ப் பசையின்றி கெட்டியாகக் காய்ச்சப்பட்ட கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் எடுக்கப்படுகிறது. வெல்லத்தை விட பனைவெல்லம் இன்னும் சிறந்தது. அதில் பி1, பி2, பி3, பி6, பி12 சத்துகள் அடங்கியிருக்கின்றன. சர்க்கரை தேவைப்படும் இடங்களில் வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்ப்பது நல்லதே!