Pages

Sunday, December 1, 2013

வெங்காய சமோசா

மாலை நேரத்து மழை  குளிரில் சுடச்சுட ஏதாவது சாப்பிட கிடைத்தால் உள்ளே தள்ளலாம் என தோன்றுகிறதா....? சாதாரண பஜ்ஜி, வடை, போண்டா போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக வெங்காய சமோசா செய்து சாப்பிட்டு பார்க்கலாமா?

 தேவையான  பொருட்கள்:

 முதலில் வெங்காய மசாலாவை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
               * மைதா மாவு - கால் கிலோ
               * எண்ணெய், உப்பு -தேவையான அளவு
               * அரை கிலோ பெரிய வெங்காயம்
               * ஐந்து பச்சை மிளகாய்
               * சிறிதளவு கொத்தமல்லி
               * கறிவேப்பிலை
               * ஒரு ஸ்பூன் சோம்பு
               * காரத்துக்கேற்ப மிளகாய் தூள்
               * சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும்
               * தேவையான அளவு உப்பு


செய்முறை:

முதலில் பச்சை மிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, பின் இதனுடன் தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெல்லிதாக தேய்த்து, அதன் மேல் மாவை தூவவும். இன்னொரு உருண்டையை எடுத்து இதே போல் தேய்த்து அதன் மீது வைத்து, மறுபடியும் நன்கு மெல்லிதாக தேய்க்கவும்.

இதனை எண்ணெய் ஊற்றாத தோசைக்கல்லில்  போட்டு. இரு புறமும் திருப்பிப் போட்டு தனியே எடுத்து விடவும். பின் கத்தியால் நீளவாக்கில் வெட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் அளவாக எண்ணெய் விட்டு காய்ந்ததும், சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். பிறகு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.

இப்போது, நீளவாக்கில் வெட்டி வைத்த துண்டை எடுத்து, முக்கோண வடிவில் மடித்து, ஆற வைத்த வெங்காய மசாலாவை உள்ளே வைத்து மூடி விடவும். நன்கு மூடுவதற்கு, மைதா பேஸ்ட் அல்லது தண்ணீரை பயன்படுத்தவும்.

கடாயில் எண்ணெயை  ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போடவும். பொன்னிறமாக மாறியவுடன், எடுத்து ஆற வைக்கவும். பின் சாஸ் அல்லது புதின தயிர் சட்னியை தொட்டு வாயில் வைத்தால்... ஆகா!


No comments: