Pages

Friday, July 11, 2014

வெற்றிலையின் மருத்துவ ரகசியம்


சளி பிடிப்பது என்பது சாதரணமானதுதான், என்றாலும் ஒரு வாரத்துக்கு படாதபாடு படுத்திவிடும். அதுவும் சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என்றால் சொல்லவே வேண்டாம். இது போன்ற சமயங்களில் பெற்றோர்கள் சிறு, சிறு கை வைத்தியம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சிறு குழந்தைகளின் சளியை போக்குவதில் வெற்றிலை முக்கிய பங்காற்றுகிறது. மூலிகை குணம் நிறைந்த வெற்றிலையின் மகத்துவத்தை இப்பொழுது காண்போம்.

மூச்சு திணறல் 

குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும், மூச்சுதிணறலும் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் வெற்றிலை சிறந்த நிவாரணமாகும். வெற்றிலையை மெழுகுவர்த்தி நெருப்பில் லேசாகவாட்டி அதனுள் நாலைந்து வெற்றிலை இலைகளை சேர்த்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து அதில் 10 துளிகள், காலை மற்றும் மாலை கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். 

அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பில் பற்று போட நெஞ்சுசளி குணமாகும்.

வெற்றிலையை கடுகு எண்ணையில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்து கட்டி வந்தால், மூச்சுதிணறலும், இருமலும் சரியாகும்.

நுரையீரல் நோய்கள்

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், ஜன்னிக்கு வெற்றிலை சாற்றில் கஸ்துரி, கேரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுத்தால் குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். நுரையீரல் நோய்கள் இருந்தால், வெற்றிலை சாறு, இஞ்சி சாறு ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், பாதிப்புகள் குறையும். வெற்றிலையை அரைத்து கீல்வாத நோய்களுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கும் வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் நோய் குணமாக
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கசாயம் செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலையை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன
வாயில் செலுத்தினால் உடனே மலம் கழியும். வெற்றிலை சாறு 15 மில்லி அளவு வெந்நீரில் கலந்து கொடுத்தால் வயிற்று உப்புசம், மாந்தம், ஜன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம், வயிற்றுவலி குணமாகும்.

கட்டிகள் குணமாகும்.
வெற்றிலைச்சாறு நான்கு துளி காதில் விட்டால் எழுச்சியினால் ஏற்படும் வலி குணமாகும்.தலையில் நீர் கோர்த்து விடாமல் மூக்கில் ஒழுகும் சளிக்கும், வெற்றிலை சாறை, மூக்கில் விட்டால் குணமாகும். வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி, லேசாக தீயில் வாட்டி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால், கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்தால் நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்து திரிகடுகத்துடன் வெற்றிலை சாறு, தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.

குரல் வளம் கிடைக்கும்
வெற்றிலையின் வேரை சிறிதளவு வாயிலிட்டு மென்று வந்தால், குரல் வளம் உண்டாகும். வெற்றிலை சாறு சிறுநீரகத்தைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலை சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.


No comments: