Pages

Tuesday, April 21, 2015

பெற்றோருக்கு மரியாதை கொடுங்க


பெற்றோருக்கு மரியாதை கொடுங்க
நாம் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் பெற்றோராகிறோம் என்றாலும், அந்த நேரத்தில் நம்மைப் பெற்றோரை நினைத்துப் பார்க்கும் போதுதான் அவர்கள் பட்ட கஷ்டம் நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் வயது கூடக் கூட பாசமும் பயமும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது பொதுவான விதி.

தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தங்களுடைய நிகழ்காலத்தின் சுமைகளைத் தாங்கும் உறவுகள் தாய், தந்தையைத் தவிர வேறு உண்டா? வாழ்க்கையில் எத்தனையோ வளர்ச்சிகளைப் பிள்ளைகளுக்கு உரித்தாக்கி அவற்றைக் கண்ணாரக் கண்டு மகிழ்வோர் பெற்றோர் மட்டுமே.

உணவு - உடை - பண்பாடு - கலாசாரம் எல்லாம் மாறிப் போனாலும், தலைமுறைகளைக் கடந்தும் மாறாதவை அன்னையின் அன்பும் தந்தையின் பாசமும்தான். அந்தத் தூய்மையான அன்பிலும் கலப்படமில்லாத பாசத்திலும் திளைத்த பிள்ளைகள், தங்கள் பெற்றோரைக் கொண்டாட வேண்டாமா? அடுத்த பிறவியிலும் இவர்களுக்கே மகனாகவோ, மகளாகவோ பிறக்க வேண்டும் என்று மனமுருகி வேண்ட வேண்டும்.

பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அவர்களுக்கு நினைவு நாள் கடைப்பிடிப்பது இவற்றையெல்லாம் விட, பெற்றோர் வாழும் போதே அவர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டும். காரணம், பெற்றோரைப் போற்றிக் கொண்டாடுவோரே நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவராவர். பெரியவர்கள் முன்பாக கால் மேல் கால் போட்டபடியோ, கால் ஆட்டியபடியோ உட்காரக் கூடாது.

பிறந்த நாள், பண்டிகைக் காலங்களில் பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும். கோயிலுக்குப் போகும் போதும் பெரியவர்களைப் பார்க்கப் போகும்போதும் வெறுங்கையுடன் போகக் கூடாது. இவற்றையெல்லாம் பின்பற்றிப் பார்த்தால்தான் அருமை புரியும்.

No comments: