Pages

Sunday, April 27, 2014

டெங்குவை ஒழித்து உயிர் இழப்பை தடுக்கும் நிலவேம்பு

நிலவேம்பு
கிராம மக்களையும் நகர்ப்புற மக்களையும் ஏன்? அனைத்து தரப்பு மக்களையும் எப்பொழுதுமே பயமுறுத்திக் கொண்டிருப்பவை வியாதிகள். டிசிஸ் என்று சொல்லக்கூடிய நோய்களுக்கு பயப்படாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். விஞ்ஞான வளர்ச்சியில் நம் தேசம் விண்ணை தொட்டுக்கொண்டிருக்கிறது.

நாகரீக வளர்ச்சியிலும் வெள்ளைக்காரர்களை மிஞ்சிக் கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் நம்மை சுற்றியுள்ள பூமா தேவியையே விலைக்கு வாங்கும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறோம். மனிதனை மனிதனே ஏமாற்றி பிழைக்கும் காலம் தானே இது.

இந்த வகையில் சமீப காலமாக அனைத்து உலக மக்களையும் பயமுறுத்திக் கொண்டு ஒரு சில நேரங்களில் உயிர் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது டெங்கு வைரஸ் காய்ச்சல். இது எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

பயம் வேண்டாம் :

இதை எண்ணி பொது மக்கள் பயப்பட தேவையில்லை. டெங்கு காய்ச்சல் மட்டும் அல்ல எந்த நோயாக இருந்தாலும் நாம் நினைத்தால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும், தீர்க்கவும் முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என்பது தான் உண்மை. எந்த நோய்களும் தானாக வருவது இல்லை.

அப்படி தானாக வருவதும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் முதல் புற்று நோய், அம்மை நோய் வரை அனைத்துமே வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது. மனிதர்களுக்கு வரும் பல்வேறு வகை நோய்கள் அனைத்துமே தாமாகவே வரவழைத்துக் கொள்வது.

தற்சமயம் அதிகரித்து காணப்படும் சர்க்கரை நோய், ஆஸ்துமா நோய், கை, கால், மூட்டு வீக்கம், எலும்பு தேய்மான நோய்கள், தோல் நோய்கள், இதய நோய்கள், உடல் பருமன் என சொல்லிக் கொண்டே போலாம்.

உணவுப்பழக்கம்:

இவை அனைத்தும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையாலும் பழக்க வழக்கங்களாலும் வேலைப்பளு மன அழுத்தம், உறக்கம் இன்மை, ஓய்வு இன்மை, கவலைகளாலும் தான் பெரும்பாலான நோய்களுக்கு நாம் இரையாகிறோம்.

நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் போது `ஏடிஎஸ் ஜிப்தி' என்ற பெண் கொசு பகலில் மனிதர்களை கடித்து டெங்கு வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது பிளாவி வைரஸ் இனத்தை சேர்ந்தது. தமிழ் நாட்டில் தான் இவ்வகை கொசுக்கள் அதிகம் காணப்படுகின்றன.

கொசு கடித்த நாள் முதல் 5-ல் இருந்து 7 நாட்களுக்குள் டெங்கு வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். காய்ச்சல் நமக்கு வருகிறது என்று தெரிந்த உடனேயே நம் உடல் எதோ ஒரு நோய்க்கு ஆளாகி உள்ளது அல்லது பாதிப்படைய போகிறோம் என்று உணர்ந்து கொண்டு உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவர்களை நாம் சென்று பார்க்க வேண்டும்.

ஏதோ தலைவலி, சாதாரண காய்ச்சல், சாதாரண உடல் வலி, செரியமையால் வாந்தி என எண்ணிக் கொண்டு அருகில் இருக்கும் மருந்து கடைகளில் மருத்துவர்கள் பரிந்துரையோ ஆலோசனையோ இல்லாமல் எந்த மருந்துகளையும் பயன்படுத்தி விலை மதிப்பில்லா உடலையும் உயிரையும் இழக்க வேண்டாம். பாதிப்புகளுக்கும் உட்படுத்தி கொள்ள வேண்டாம்.

டெங்கு அறிகுறிகள்:

டெங்கு காய்ச்சலாக இருந்தால் தலைவலி தும்மல், குளிர், நடுக்கம், கண்களில் வலி, கை கால் மூட்டுகளில் வலி, சாப்பிட இயலாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

நோயை உடனடியாக கவனிக்காமல் சாதாரண காய்ச்சலாக எண்ணி அஜாக்கிரதையாக 2, 3 நாட்கள் சென்ற பிறகு மருத்துவம் செய்ய மருத்துவரை அணுகும் போது நோயின் தீவிர நிலை ஏற்பட்டு தோல் பகுதி , பல் ஈறுகளில் ரத்த கசிவு கூட ஏற்படலாம்.

டெங்கு வைரஸ் கொசுவானது மழை நீர் தேங்கி உள்ள பழைய மண்பானைகள் இருக்குமிடம், பிளாஸ்டிக் பொருட்கள் தேக்கி வைத்துள்ள இடங்கள், சிமிண்ட் நீர் தேக்க தொட்டிகள், கழிவு நீர் குழாய்கள், குளிர்சாதன பெட்டி, தேங்காய் மட்டை, தேங்காய் நார் போட்டு வைத்துள்ள குடோன்கள், குப்பைகள் தேக்கி வைத்துள்ள இடங்கள்...

இப்படி பல்வேறு இடங்களில் வைரஸ் கொசுவானது தங்கி இருந்து இனப்பெருக்கம் செய்து மனிதர்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

ரத்தப்பரி சோதனை:

டெங்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட உடன் ரத்தபரிசோதனை செய்து பிளேட்லெட் என்று செல்லக்கூடிய ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு இந்த நோயை உறுதி செய்து கொள்ளலாம். சராசரியாக ஒருவருக்கு ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு ரத்த தட்டுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாகவும், 1 லட்சத்துக்கு குறைவாகவும் காணப்படும் போது நோயாளி தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்.

இந்நிலையில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வீடுகளில் குப்பைகள் தேங்காமல் சுகாதாரமாக தண்ணீர் பாத்திரங்களை மூடி வைப்பது, கழிவு நீர், மழை நீர் தேங்காமல் பாதுகாப்பது, ஜன்னல்களில் கொசு வலைகளை அமைப்பது, தூங்கும் பொழுது கொசு வலைகளை பயன்படுத்துவது, இயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்துவது, தூய சாம்பிராணி புகை போடுவது போன்றவற்றால் தடுக்க முடியும்.

நிலவேம்பு- வெட்டிவேர்:

மருந்து என்று எடுத்துக் கொண்டால் எந்த பக்க விளைவையும் தராத நில வேம்பு,வெட்டி வேர், விலாமிச்சம் வேர்,சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, பற்படாகம், சுக்கு, மிளகு சேர்ந்த நில வேம்பு குடிநீர் சூரணத்தை 200 மில்லி லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் சூரணத்தை போட்டு 50 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை, மதியம், மாலை என நோயின் தன்மை வயதுக்கு தக்கபடி மருத்துவர் ஆலோசனை படி வழங்கலாம்.

பப்பாளி இலை சாறு 10 மில்லி முதல் 20 மில்லி வரை தேன் கலந்து காலை, மதியம், மாலை என வழங்கலாம். மலை வேம்பு இலைச்சாறு 10 மில்லி முதல் 20 மில்லி வரை தேன் கலந்து 3 வேளையும் வழங்கலாம். மகாசுதர்சன மாத்திரை காலை 2, மாலை-2, இரவு-2 என நோயாளியின் தீவிரத்திற்கு ஏற்ப மருத்துவர் ஆலோசனை பெற்று வழங்கலாம்.

மேல் பூச்சி தைலங்கள், பற்றுக்களை மருததுவர் ஆலோசனையோடு நோயாளிக்கு வழங்கினால் டெங்கு காய்ச்சல் மட்டும் அல்ல எந்த நோயையும் முற்றிலும் குணப்படுத்தலாம். தரமான மருந்துகளை மருத்துவர் ஆலோசனை பெற்று வாங்குங்கள், போலிகள் நிறைந்த உலகில் ஏமாறாமல் மருத்துவர் உதவியுடன் நோய்களை குணமாக்கி உடலை பாதுகாத்து கொள்ளுங்கள் என்கிறார் திருச்சி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை சிறப்பு நிலை சித்த மருத்துவர் டாக்டர் எஸ்.காமராஜ்.

கொசுவை ஒழிக்க புகை மூட்டம் :

1. மா இலை, நொச்சி இலை, வேப்பிலை ஆகிய மூன்றையும் கலந்து புகை போடலாம்.

2.துளசி இலை, வேப்பிலை இரண்டையும் கலந்தும் புகை போடலாம்.

3. துளசி, மருதாணி, தும்பை, நொச்சி, மாஇலை கலந்தும் புகை போடலாம்.

4.வேப்பிலை, துளசி இலை, மிளகு, மஞசள், சுக்கு போட்டு கசாயம் போட்டு குடிக்கலாம்.

5. மஞ்சள், துளசி, வேப்பிலை, தும்பை இலை, நொச்சி இலை, கரிக்கட்டை இவைகளை ஒன்று சேர்த்து வில்லை தட்டி நிழலில் உலர்த்தி பின் கொசு வர்த்தியாக பயன்படுத்தலாம்.

6.கற்பூர தைலத்தை உடல் பகுதியில் பூசிக்கொண்டால் எளிதாக கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம்.

No comments: