Pages

Saturday, March 22, 2014

உணவகங்களில் சாப்பிட விரும்பும் நாகரீகம்

உணவகங்கள்
உணவகங்களில் வித விதமாக ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. எவ்வளவு தான் பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து சுவைத்தாலும், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது தனிக் கொண்டாட்டம் தான். பெண்கள் வேலைக்கு செல்வதால் ஏற்பட்ட மாற்றம் இது.

வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாகவோ, களைத்தோ வீடு திரும்பும்போது, ‘குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வெளியே சாப்பிட்டால் என்ன?’ என்ற சிந்தனை எழுகிறது. திடீர் விருந்தாளிகள் வரும்போதும், திருமணநாள்,   பிறந்தநாள் போன்ற முக்கிய விழாக்களை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்பும்போதும் உணவுக்காக ஓட்டல்களை நாடுகிறார்கள். பள்ளி விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்க, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டையடிக்கவும் உணவகங்கள் பயன்படுகின்றன.

பெண்கள் மட்டுமல்ல இப்போதெல்லாம் ஆண்களும் சுவையாக சமைக்கிறார்கள். காரணம் உணவகங்கள். ஒரு பொருளை சாப்பிடும் போதே, இது எதனால் செய்யப்பட்டது, எப்படி செய்யப்பட்டது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே சாப்பிடும் போது அந்த உணவுப் பொருளின் உள்ளடக்கமும், செய்முறையும் தெரிந்துவிடும். பிறகு அதை வீட்டில் செய்துபார்க்கிறார்கள்.

எதிர்பார்த்த சுவை கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, ஓரளவு அதில் வெற்றிபெற்று மகிழ்ச்சிஅடைகிறார்கள். இப்படித்தான் பல பெண்கள் புதிய வகை உணவுகளை சமைக்க கற்றுக் கொள்கிறார்கள். இதனால் உணவகங்களில் சாப்பிடுவது ஒரு படிப்பினையாகிவிடுகிறது. ஒரு சில உணவகங்களில் தங்களது சுவைமிகுந்த ரெசிபிகளை, எப்படி தயாரிப்பது என்று வாடிக்கையாளர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் செய்கிறார்கள்.

ஒரு உணவுக்கு பல ஓட்டல்களில் ஒரே பெயர்தான் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரே மாதிரியான பொருட்களைத்தான் சேர்க்கவும் செய்கிறார்கள். ஆனால் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி சுவை அதிகமுள்ள உணவகங்களில்தான் கூட்டம் சேருகிறது. சாதாரண உணவுப் பொருட்களைக் கொண்டு இப்படி எல்லாம் தயாரிக்க முடியுமா என்று வியக்கும் வண்ணம் உணவகங்கள் வித்தியாசமான உணவுவகைகளை தயாரிக்கின்றன.

பாரம்பரிய உணவுகள், கான்டினென்டல், சைனீஷ், கிரேக்கம், இத்தாலி என்று பல்வேறு நாட்டு உணவுகள் இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. வட இந்திய, தென் இந்திய உணவுகளும் மக்களை கவர்கிறவே செய்கிறது. ‘உணவுத் திருவிழா’வை பல்வேறு உணவகங்கள் நடத்துகின்றன. அப்போது சிறப்புக்குரிய உணவுகள் பலவற்றை சுடச்சுட தயாரித்து மக்களுக்கு கொடுத்து அவர்களை உணவுப்பிரியர்களாக மாற்றிவிடுகிறது.

உணவு மட்டும் சுவையாக இருந்தால் போதாது. அவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தின் சூழ்நிலையும், அழகும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கவேண்டும். அதோடு உணவு பரிமாறுகிறவர்களும் இதமாக   நடந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. இப்படி எல்லாவற்றிலும் திருப்திபடுத்தும் உணவகங்களே மக்கள் நாவில் மட்டுமல்ல, மனதிலும் இடம் பிடிக்கின்றன. நீங்கள் உணவுப்பிரியர் என்றால், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்...

* உங்கள் பகுதியை சுற்றியிருக்கும் தரமான உணவகங்கள் பற்றி தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.

* ஷாப்பிங் முடிந்து அந்தப் பகுதியிலுள்ள உணவகத்திற்கு செல்லதிட்டமிட்டிருந்தால், அவசரப்படாமல் சரியான உணவகங்களை தேர்ந்தெடுத்து உணவருந்துங்கள்.

* பிரபலமான ஓட்டல்களில் உணவருந்த ஆசைப்பட்டால் முன் கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். எரிச்சல் இன்றி சந்தோஷமாக சாப்பிடவும் வழி ஏற்படும்.

* முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் அந்த உணவகத்தை அடைய முடியாவிட்டால், உங்கள் இடம் வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடும். அதனால் கூச்சல் போடாதீர்கள்.   ஏன் என்றால் சாப்பிடும் முன்பு மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கோபத்தோடும், எரிச்சலோடும் சாப்பிடும் உணவு சரியாக செரிப்பதில்லை. பொது இடங்களில் நாகரீகமாகவும் நடந்துகொள்ள தெரிந்துகொள்ளவேண்டும்.

* குழுவாக சாப்பிடச் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தால், பதிவு செய்ததைவிட அதிகமான நபர்களை அழைத்துச்செல்லவேண்டாம். வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றுவிட்டால், அதை முன்கூட்டியே உணவகத்திற்கு தெரியப்படுத்திவிடுங்கள்.

* எந்த உணவகத்திற்குச் சென்றாலும் அங்கு பணிபுரியும் ஊழியர் களிடம் நட்போடு பழகுங்கள். அவர்களும் உங்களைப் போன்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மரியாதையும், மதிப்பும் அவர்களுக்கு கொடுங்கள்.

* நிதானமாக, யோசித்து ஆர்டர் கொடுங்கள். ஒரு முறை ஆர்டர் செய்து விட்டு, பாதியில் ஆர்டரை மாற்றாதீர்கள். நீங்கள் ஆர்டர் செய்த உணவு பாதி தயாராகிவிட்ட நிலையில் மாற்றினால், உணவகத்தினருக்கு அது அசவுகரியம் ஆகிவிடும்.

* குழந்தைகளை அழைத்துச் செல்வதாக இருந்தால், உணவகங்களில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள். மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் எப்படி சாப்பிடுவது   என்று கற்றுக் கொடுங்கள். எந்தெந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். தானே சாப்பிட பழக்குங்கள். குழந்தைகளின் அறிவு வளர்ச்சியடைந்து விட்டது என்பதை குறிக்கும் செயல் தானே எடுத்து சிந்தாமல் சாப்பிடுவது. மனவளர்ச்சி குன்றியவர்களால் அப்படி சரியாக சாப்பிட முடியாததை கவனித்திருப்பீர்கள்.

* பரிமாறும் சர்வருக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பது இப்போது அங்கீகரிக்கப்பட்ட விஷயம்போல் ஆகிவிட்டதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* பசியோடு நிறைய பேர் காத்திருக்கும் போது வெறும் டீ, காபி ஆர்டர் செய்துவிட்டு மணிக்கணக்காக இடத்தை பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம்.

* ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதை மென்மையாக எடுத்துக் கூறுங்கள். நாம் பணம் கொடுக்கிறோம் என்ற கர்வத்தில் வார்த்தைகளை சிந்திவிடாதீர்கள்.

* பலரோடு உணவகத்திற்கு செல்லும் போது அவரவருக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யும்படி கூறுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு ஆர்டர் கொடுக்க வேண்டாம். அது அவர்களை உபசரிப்பதாகாது.

* உங்களுக்காக வரவழைக்கப்பட்ட உணவுகளையே நீங்கள் சாப்பிட வேண்டும். உடன் இருப்பவர்கள் என்றாலும், அவர்களுக்கான உணவை நீங்கள் பங்கிடுவது அவர்களுக்கு அசவுகரியத்தை உருவாக்கிவிடும்.

No comments: