Pages

Tuesday, December 9, 2014

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

35 வயதை தொடும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும் அவர்கள் இந்த ஸ்டீம் முறையை பின்பற்றி வந்தால் முகத்தில் உண்டான சுருக்கம் படிப்படியாக மறைவதை காணலாம்.

வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதை விடவும், சில பொருட்களைப் போட்டு ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும். இங்கே இரண்டு வகை ஸ்டீம் முறைகளைத் தந்திருக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள். 

 வேப்பிலை ஸ்டீம்: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி விடுங்கள். இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.

எலுமிச்சை ஸ்டீம்: கொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், `ஐஸ்' கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலை மாவை கலந்து `பேக்' போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப்போகும். இனி, சுருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு. 

நோய் தீர்க்கும் வாழைப்பழம்

வாழைப்பழம்


வாழைப்பழம், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. எனவே, தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மருத்துவர்களை சந்திக்காமல் இருப்பதற்கு உதவும். வாழையின் பூ, தண்டு, இலை முதல் நார் வரை அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம்.

இன்றும் நமது இல்லங்களில் சாதாரணமாக வாழைப்பழங்கள் இருக்கும். ஆனால், நம்மில் பலர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. வாழையால்  உடல் பருமன் அதிகரிக்கும் என்ற பயத்தில் பலர் இந்த வாழையின் பக்கம் போவதில்லை. ஆனால், வாழை பல நோய்களை தீர்க்கும் குணமுள்ளது.

வாழைப்பழத்தில், சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுகோஸ், என மூன்று இயற்க்கை சர்க்கரை உள்ளது. இதில் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமான பைபரும் பெருமளவு இணைந்துள்ளது. ஒரு வாழை ஏராளமான ஆற்றல் உடையது. இரண்டு வாழைப்பழங்கள், விறுவிறுப்பான 90 நிமிட நடைபயிற்சிக்கு போதுமான ஆற்றலை கொடுக்கவல்லது. ஆனால், வாழைப்பழத்திலிருந்து நமக்கு கிடைப்பது ஆற்றல் மட்டுமல்ல. அன்றாட வாழ்வுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கொண்டுள்ளதுடன், சில நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் அமைந்துள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்கள்  மத்தியில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு சமீபத்திய  ஆய்வின்படி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். இதற்கு காரணம், வாழைப்பழங்களில் உள்ள டிரிப்தோபன் என்ற புரதம் ஆகும். இது நம் உடலில், உடலை  நிலைப்படுத்தும்  தன்மை  கொண்ட , செரொடொனினாக மாறுகிறது.

ரத்த சோகை
வாழையில் அதிகமாக மற்றொரு சத்துப் பொருள், இரும்பு, இது ரத்த ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டுவதுடன், ரத்த சோகைக்கு பெரும் நிவாரணம் தரக்கூடியது. எனவே ரத்த சோகைக்காக பேரிச்சையை மட்டும் நாடாமல், எளிதாக கிடைக்கும் வாழையையும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்


வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியமும், குறைந்த அளவு உப்பும் உள்ளது. எனவே ரத்த அழுத்தத்தை சீராக்க பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், வளரும் இளம் மூளையை மேம்படுத்துவதில் இன்றியமையாதது. எனவே, வாழைப்பழம் மாணவர்களுக்கு மிகவும் ஏற்றப்பழமாகும்.

நெஞ்செரிச்சல்

வாழைப்பழங்கள் இயற்கையான ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது. எனவே அடுத்த முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வெறும் வாழைப்பழம் போதும்.

Saturday, November 29, 2014

தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு கெடுதியா?


தேங்காய் ஆபத்தானது என்று பலர் தவிர்க்கின்றனர். தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகின்றோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.

தினசரி 30 முதல் 40 கிராம் வரை தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்சினையே இல்லை. துருவி பால் எடுத்து கொதிக்கவைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள், கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு.

அந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரயாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடியவரை கொப்பரையை சமையலில்  சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காய் எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயை தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோக்கிறபோது அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகிறோம். வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சி இருக்கும்.

தேங்காய் வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால் தான் வாயில் புண் வந்தால் கூட, தேங்காயை மென்று சாப்பிடச் சொல்கிறார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய்பால் சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதின் பின்னணியும் இதுதான்.

சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் எனப்படும். கெட்ட கொழுப்பு அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும் வெள்ளமும் அதிகம் தரலாம்.

தேடுறதையே வழக்கமா வச்சிருப்பவர்களுக்கு....!

உண்மையை சொல்லுங்கள்... ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது மறந்து வைத்துவிட்டு பதறி தேடுவீர்கள் தானே?! இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படும் என்றாலும் அதை எளிதாக தடுத்து விடலாம்.

எவ்வளவு பெரிதாக வீடு இருந்தாலும்... வசதி இருந்தாலும் அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்காமல் இருந்தால் வீடும் நன்றாக இருக்காது... எந்தப் பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் அவஸ்தைப்பட வேண்டியது தான்.
 

உதாரணமாக உடைகள் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கான இடத்தில் அழகாக அடுக்கி வைத்து விட்டாலே போதும்... உடைகளும் அழுக்காகாமல் சுத்தமாகவும், அந்த அறையும் உங்கள் முகத்துக்கு மேக்கப் போட்டது போல் அழகாக இருக்கும். இதை பார்க்கும் உங்களுக்கே மனசு சந்தோஷமாக இருக்கும்.
இப்படி ஒவ்வொரு பொருட்களையும் அந்தந்த இடத்தில் பொருத்தமாக வைத்தால் வீட்டை சுத்தப்படுத்துவது ரொம்ப ஈஸி. இதைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கம் தொடரும். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தும் இதுதான்.


உங்களிடம் நிறைய பணம் இருந்தால்... கடைக்கு செல்லும்போதெல்லாம் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வருவீர்கள். ஆனால் அதற்கு முன்னால் அந்தப் பொருளை வீட்டில் வைப்பதற்கு இடமிருக்கிறதா? என்பதை யோசித்துப் பார்த்து வாங்குவது நல்லது.


புதிது புதிதாக உடைகள் வாங்கினால் அவைகள் சீக்கிரத்திலேயே பழைய துணிகள் ஆகிவிடும். சிலரோ மொத்தமாக உடைகளை வாங்கி திணிப்பார்கள். ஒரே நாளில் பத்து துணிகள் வாங்கி வைப்பதால் எந்த லாபமும் இல்லை. அதே நேரத்தில் தேவையில்லாததை, பழையதை தூக்கி எறியவும் வேண்டும்.
 

பெண்களுக்கு முகம் போன்றது "லிவ்விங் ரூம்". விருந்தினர்கள் வந்து
 பார்த்தாலும் "அறையை அழகாக வைத்திருக்கிறாயே?!" என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வைத்திருக்க வேண்டும். அந்த அறையில் டிவி ஸ்டாண்ட் மற்றும் ஷோகேஸ் ஆகியவற்றை முக்கியமாக பாதுகாப்பாக வைக்கலாம். டிவி, மியூசிக் சிஸ்டம் மற்றும் டிவிடி பிளேயர் ஆகியவற்றை "லிவ்விங் அறை"யில் வைக்கலாம்.

அதேபோல் பத்திரிகை, புத்தகங்கள், சிடிக்கள் ஆகியவற்றை ஷோகேஸ்ஸில் அழகாக அடுக்கி வைக்கலாம். "லிவ்விங் ரூம்" சின்னதாக இருக்கும்பட்சத்தில் அறையின் மூலையில் டிவி ஸ்டாண்ட் வைக்கலாம். அழகான படங்கள் வைத்திருக்கும் பாக்ஸில் டிவியை இணைத்து வைத்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

Friday, November 28, 2014

பெண்களுக்கு கால் வலி குணப்படுத்த பயிற்சிகள்


பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள் ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது. ஆனால் இப்போது இருக்கிற நவீன உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம்.


அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப்பது  போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி அதிலேயே கிடைத்தது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றுக்கும் மிஷின் வந்துவிட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் எடுத்து காயப்போட சோம்பேறித்தனமாக இருக்கிறது. சமையலறையிலேய இரண்டு மணி நேரமானாலும் நின்று கொண்டு சமைக்கிறோம்.

ஆனால் வேலைக்கு போகும் பெண்கள், அவசர அவசரமாக சமைப்பதால் அவர்களுக்கு நேரம் இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்களை விட வீட்டிலிருக்கும் பெண்களுக்குத்தான் வேலை அதிகம். அப்படியே கிச்சன் மேடையில் நின்றுகொண்டே காய் நறுக்காமல், உட்கார்ந்து எல்லாம் ரெடியாக கட் செய்து வைத்து விட்டு பிறகு செய்யலாம். இஞ்சி, பூண்டு நறுக்கும் போது அதிக நேரம் எடுக்கும்.

சிரமப்படும் அம்மணிகளுக்கு சில சிம்பிள் உடற்பயிற்சிகள்:

1. இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, முன்னும் பின்னுமாக சுழற்றலாம். இதனால் கை தோள்பட்டை வலி கையில் உள்ள சதை குறையும்.
2. தோப்பு கரணம் போடுவது போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அளவிற்கு உட்கார்ந்து எழலாம். எல்லாம் ஒரு 5 கவுண்ட்  அளவிற்கு செய்யலாம். இது மூட்டு வலிக்கு நல்ல உடற்பயிற்சி.

3. இடுப்பில் கை வைத்துக் கொண்டு நேராக நின்றுக்கொண்டு இடது வலது புறங்களில் சுற்றலாம். இது கழுத்துக்கு நல்ல உடற்பயிற்சி.

4. தலையை மட்டும் மேலும் கீழும், இடது வலது புறங்களில் சுழற்றலாம். இது கழுத்துக்கு நல்ல உடற்பயிற்சி,

5. டோர் மேட்களை கையில் துவைக்க வேண்டி வரும். அதை நல்ல சோப்பு தண்ணியில் ஊற வைத்துவிட்டு கீழே போட்டு நாலு மிதி மிதித்தால், அழுக்கும் போகும்: கால் வலிக்கும் ஒரு நல்ல உடற்பயிற்சி கிடைக்கும்.

6. குழந்தைகளை குளிக்க வைக்க, கீழே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு குளிக்க வைக்கலாம்.

7. கம்ப்யூட்டர் முன் அரை மணி நேரத்துக்கு மேல் உட்காராதீர்கள்.

8. வாகனங்களில் செல்லும் போது கூட, எங்காவது ஓரமாக நிறுத்தி விட்டு ஐந்து நிமிடம் கண்களை மூடி கண்ணுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்.

9. இரவு தூங்க போகும் போதும், காலை எழும்போதும் உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும். இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும்.


Thursday, November 27, 2014

சுகபிரசவத்துக்கு உதவும் வளைகாப்பு!

வளைகாப்பு கர்ப்பிணிக்கு உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் தரும். கர்ப்பிணியை தனித்துவமாகவும், சந்தோஷமாகவும், வைக்கும். கர்ப்பிணிகளுக்கு வளையல் போடுவதன் மூலம், எளிதாக பிரசவம் ஆகும் என, ஆரைய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம்.

கர்ப்பிணி வீட்டார் பலரையும் இவ்விழாவிற்கு அழைப்பார்கள். அவர்கள் பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்கள் போட்டு விடுவார்கள். கர்ப்பிணி எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் வேண்டுதலாக இருக்கும். இது போன்ற நமது சம்பிரதாயங்கள் எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகிறது. வளையல்களை கர்ப்பிணிகளுக்கு போடும் போது, அதன் சத்தம் வயிற்றில் இருக்கும் குழந்தையை சென்றடைகிறது. செவியை மட்டும் பயன்படுத்தி, வெளியுலகை உணரும் தன்மையை கொண்ட சிசு, இத்தகைய சத்தங்களை கேட்க ஏங்கிக்கொண்டிருக்கும். இது பிரசவத்தை எளிதாக்குகிறது.

பிரசவ இடம்:
வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புவதை போல், முதல் பிரசவத்தை தாய் வீட்டில் வைத்தால், அப்பெண்ணுக்கு பயன்கள் நீங்கி, பிரசவம் எளிதாக நடக்க உதவியாக இருக்கும்.

பயணம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். அது மட்டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின், கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும்.

இசையின் அற்புதங்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் இதமான மெல்லிசையை கேட்டுக் கொண்டிருந்தால் மன அழுத்தத்திலிருந்து அற்புதமாக தப்பிக்கலாம். இது சிசுவின் கேட்கும் திறனை அதிகரிக்கும்.
மிகவும் அதிகமான மன அழுத்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந்த எடை பிறக்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். எளிய பிரசவத்துக்கு நல்ல சத்தான உணவும் உதவும். இதை கர்ப்பிணிகள் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டிலிருந்து, தாய் வீட்டிற்கு செல்லும் போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள்.ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து, பிரசவத்தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.

விழாக்கள்: ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்களாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக்கப்படுவாள். இவை அந்த பெண்ணை சந்தோஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக்கும். உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.


'ஸ்ட்ரோக்' வந்த 3 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.


'ஸ்ட்ரோக்' வந்த 3 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.  அலட்சியம் காட்டினால் ஆபத்து.

'பக்கவாதம் (ஸ்ட்ரோக்) வந்த மூன்று மணி நேரத்திற்குள், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். குறித்த நேரத்திற்குள் அடைப்பை சரிசெய்யும் மருந்தை செலுத்தினால், முற்றிலும் குணமாக்கலாம். தாமதமாக வந்தால் ஒன்றும் செய்ய முடியாது' என்கிறார் நரம்பியல் நிபுணர் கே.பானு.

உலக பக்கவாத நோய் தினம் (ஸ்ட்ரோக்) அக்டோபர்., 29 ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அரசு பொது மருத்துவ மனையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பங்கேற்று, பல்வேறு சந்தேகங்களுக்கு, மூளை நரம்பியல் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

பக்கவாத நோய் என்றால் என்ன?

கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன.பெரிதாக உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக பிரிந்து, நுண்ணிய ரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லா திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.

மூளைக்கு செல்லும் பேரு, சிறு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராணவாயு , ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று, இதை, மூளை அடைப்பு எனலாம்.

பக்கவாதத்தில் வகைகள் உண்டா? முற்றுப்பெறாத பக்கவாதம் என்றால் என்ன?

தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். ரத்தக் கசிவால், தற்காலிக பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.

தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உரைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்திநாளோ ஏற்படுவது. திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். இடையில் பாதிப்பு அதிகரித்தோ, குறைந்தோ காணப்படும்.

முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. இதிலும், இரண்டு வகைகள் உண்டு. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு கடுமையாக இருக்கும்.

பக்கவாத பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன? பாரம்பரிய நோயா?

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படித்தல், அதிக உடல் எடை, பருமன் கூடுதல், புகை, மது பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று நோயாலும், பக்கவாதம் வரலாம்.

பாரம்பரியமாகவும் இந்த பாதிப்பு வருகிறது. 80 சதவீத பக்கவாதம், மூளையில் ரத்தக்குலாஇகல் அடைப்பாலும், 20 சதவீஸ் பக்கவாதம், மூளையில் ரத்தம் கசிந்து தேங்குவதாலும் ஏற்படுகிறது.

பக்கவாதத்தை வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல், செயல் இழந்து போகுதல் போன்ற உணர்வு, திடீரென தலை சுற்றல், திடீர் குழப்பம், பேச்சு குழறுதல், பேரர் பேசுவதை புரிய முடியாமை, திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்போதே, உஷாராகி விடுவது நல்லது.

எந்த வயதினரை பாதிக்கும். இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதா?

உலகில், ஆறு நிமிடத்தில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது. நிமிடத்திற்கு, 10 இறக்கின்றனர். இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், 222 பேருக்கு, பக்கவாத பாதிப்பு உள்ளது. ஆண்டுக்கு, 16 லட்சம் பேர், இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. பக்கவாதம் வந்த, நான்கு வாரங்களில், 18 முதல் 41 சதவீதம் பேர் இறக்கின்றனர்.

அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? மூன்று மணிநேரம் 'பொன்னான நேரம் ' என்கிறார்களே ஏன்?

அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மொழி அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து (thrombolitic  therapy ) செலுத்தினால், முற்றிலும் குணப்படுத்த முடியும்.

தாமதமாக வந்தால், மருந்து  மருந்து போட்டாலும் பயனில்லை. பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை, 'பொன்னான நேரம்' என்கிறோம்.

எல்லோருக்கும் இந்த மருந்தை போட முடியுமா? வேறு சிகிச்சை முறைகள் என்ன?

பாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும். தகுதியான் நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்த முடியாது.

பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு, நீண்ட கால சிகிச்சையாக மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைக்கு ஏற்ப, பேச்சு பயிற்சியாளர், உடல் இயக்க சிகிச்சையாளர், மன நல ஆலோசகர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவி, பாதிப்புக்கு தகுந்தாற்போல் தேவைப்படும்.

இவர்கள் அனைவரும் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும்போது, வெகு விரைவில் குணமாக வாய்ப்புள்ளது.

பக்கவாதம் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்துதல் அவசியம்.

பழம்  கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை கொழுப்பு உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகி விடுவோம். அத்தகைய நிலை வராமல் பாதுகாப்பது நம் கையில் உள்ளது.