Pages

Sunday, September 7, 2014

இனிது இனிது வாழ்தல் இனிது

ஜார்ஜ் வாஷிங்டன் பற்றிய பிரபல கதை ஒன்று இன்றும் அமெரிக்காவில் பிரபலம். வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம். ஒருநாள் வாஷிங்டனுக்கு புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்திருக்கிறார். அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி. மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம். உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டிருக்க, வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையை சொன்னே பார்த்தியா... அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது.  

செர்ரி மரம் வெட்டப்படாம இருந்திருந்தா எனக்குக் கிடைச்சிருக்கிற சந்தோஷத்தைவிட, நீ உண்மை பேசினதுல எனக்குப் பெரிய சந்தோஷம்...” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம். வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது. அதன்பிறகு, தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய விஷயத்துக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார்.

அமெரிக்காவில் இன்றும் பிரபலமாக சொல்லப்படுகிற கதை இது. உண்மையென நிரூபிக்கப்படாத கதை என்றாலும், பிள்ளைகளுக்கு நேர்மையைப் போதிக்க, அங்கே அனேக பெற்றோரும் இந்தக் கதையைச் சொல்லியே வளர்ப்பார்கள். நேர்மை என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. பல நல்ல மனிதர்களும் வாழ்க்கையில் வழுக்கி விழக் காரணமே நேர்மையில் சறுக்கியது தான். ஒரு காலத்தில் பெரிய தியாகிகளாகஅறியப்பட்டவர்களாக, பல லட்சியங்களை சுமந்தவர்களாக இருந்த பலரும், ஒரு கட்டத்துக்குப் பிறகு, அவற்றிலிருந்து நகர்ந்து, ‘நேர்மை அத்தனை முக்கியமில்லை’ என்கிற முடிவுக்கு வந்ததால், சமூகக் குற்றங்களில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொண்ட கதைகளைக் கேள்விப்படுகிறோம்.

நேர்மையிலிருந்து பிறழ்கிற இந்த குணம், குடும்பங்களில் - தம்பதிக்குள் சர்வசாதாரணமாக நடக்கிற ஒன்று. கணவனும் மனைவியும் நேர்மையுடன் வாழும் போது, அவர்களுக்குள் பரஸ்பர நெருக்கமும் மரியாதையும் கூடும். இருவரில் யாரேனும் ஒருவர் அதிலிருந்து விலகும் போது இந்த இரண்டும் கெட்டுப் போகும். கணவர் பல சந்தர்ப்பங்களில் மனைவியிடம் பொய் சொல்லியிருப்பார். மனைவிக்கும் அப்படி கணவரிடம் பொய் சொல்ல வேண்டிய தருணம் ஒன்று வரும். ‘ஒரே ஒரு பொய்தானே... அவர் நம்மகிட்ட சொல்லாத பொய்யா?’ என்கிற நினைப்பில் அவரும் பொய் சொல்லப் பழகுவார். அது போகப் போக ஒரு பழக்கமாகவே மாறும். உண்மையை சொல்ல நிறைய வாய்ப்புகள் இருந்தாலுமே, ‘எவ்வளவு தூரம் பொய் சொல்ல முடியும் எனப் பார்ப்போமே’ என்று பார்ப்பதற்காகவாவது அப்படிச் செய்யத் தூண்டும். ஒருநாள் தம்பதிக்குள் ஒரு பிரச்னை பூதாகரமாக வெடித்துக் கிளம்பும் போது, இருவரும் ஒருவருக்கொருவர் நேர்மையின்றி நடந்து கொண்டது தெரிய வரும். ‘நீ என்னை ஏமாத்திட்டே...’ என்கிற பேச்சு எழும். இருவருமே அந்த நேர்மையின்மைக்குப் பல வருடங்களாகப் பழகியிருப்பார்கள் என்பதுதான் உண்மை. 

சரி... நேர்மையற்றவர்களை எப்படி அடையாளம் காண்பது?

♦ நேர்மை தவறி நடப்பவர்கள் எப்போதுமே தன் தவறை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவரையே காரணம் காட்டுவார்கள். சூழலைக் குறை சொல்வார்கள். எதற்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டார்கள். தப்பு செய்தது உறுதி செய்யப்பட்டாலுமே, அதன் பின்னணியில் உள்ள தன் உள்நோக்கம் சரிதான் என விவாதம் செய்வார்கள்.

♦ ஒழுக்கத்தையும் நேர்மையையும் பற்றி அடுத்தவருக்கு போதனை செய்வார்கள். ஆனால்,  அவற்றை மீறியே நடப்பார்கள். தான் தன் வாழ்க்கைத்துணையை விட எப்போதும், எல்லா விதங்களிலும் மேல் என நம்புவார்கள். நேர்மையாக இருப்பதென்பது முட்டாள்களின் அடையாளம் என நினைப்பார்கள்.

♦ நேர்மையான நல்ல மனிதர்கள் எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்பும், ‘என் தகுதிக்கு இந்தச் செயலைச் செய்யலாமா?’ எனக் கேட்பார்கள்.  நேர்மையற்றவர்கள் என்றால், ‘இந்தத் தவறை நான் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியுமா?’ எனக் கேட்பார்கள். முடியும் எனத் தெரிந்தால், அந்தத் தவறை செய்யத் தயங்க மாட்டார்கள். கணவன் - மனைவிக்குள்ளும் இதுவே நடக்கிறது. ‘நான் செய்வது சரியா?’ எனக் கேட்கிற துணையைவிட, ‘இதிலிருந்து தப்பித்து விடுவேனா?’ என யோசிக்கிறவரே அதிகமாக இருக்கிறார்கள்.

♦ சின்னச் சின்ன பொய்கள் தீங்கற்றவை என நினைப்பார்கள். அப்படி சின்னதாக பொய் சொல்லிப் பழகுகிறவர்கள், தொடர்ச்சியாக அடுத்தடுத்த நேர்மையற்ற காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். திருட்டு, குடி, வாழ்க்கைத்துணை அல்லாத வேறொரு நபருடன் உறவு, போதைப் பழக்கம் என அந்தத் தொடர்ச்சி எல்லைகள் மீறிப் போகலாம். துணைக்குத் தெரியாத வரையில் தப்பித்துக் கொண்டிருப்பவர்கள், ஒரு நாள் தெரிய வரும் போது, அதை மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகமாகப் பார்த்து, நிரந்தரப் பிரிவு வரை போவார்கள்.நேர்மையற்ற வாழ்க்கையில் விழுந்து விடாமலிருக்க என்ன செய்யலாம்?

♦ நமக்கு நாமே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது. துணையிடம் சின்ன பொய்யைக் கூட சொல்வதில்லை என்கிற அந்த உறுதியான ஒப்பந்தம், நிச்சயம் தவறு செய்யத் தூண்டாது.

♦ நேர்மையற்று நடக்கிற துணையிடம், தன் அதிருப்தியை கோபப்படாமலும் அதே நேரம் தெளிவாகவும் கண்டிப்பாகவும் வெளிப்படுத்துவது. உதாரணத்துக்கு ‘உன்னுடைய நேர்மையற்ற செயலை நீ தொடர்ந்தால், உறவைத் துண்டித்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கக் கூட நான் தயங்க மாட்டேன்’ எனச் சொல்லி வைக்கலாம்.
 

♦ நேர்மையாக இருப்பது பாதுகாப்பான உணர்வைத் தரும் என நம்பலாம்.

♦ பொய்யை நியாயப்படுத்த முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும். துணையிடமிருந்து தப்பிக்க, பொய்யை மறைக்கவோ, நியாயப்படுத்தவோ செய்கிற முயற்சிகள், ஆரம்பத்தில் எளிதாக இருந்தாலும், போகப் போக கணவன் அல்லது மனைவிக்கு தன் துணையின் மீதான நம்பிக்கையின்மையை வளர்க்கும்.

♦ தவறுகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ பொய்யை சொல்லி சிக்கலை ஏற்படுத்தி விட்டீர்களா? அதை ஏற்றுக் கொண்டு, ‘எதிர்காலத்தில் அந்தத் தவறைத் தொடரவே மாட்டேன்’ என துணைக்கு உறுதியளியுங்கள். இதற்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். எல்லோருக்கும் சாத்தியமாகாதது. பழகிக் கொண்டாலோ, இந்த மனப்போக்கானது, துணையிடம் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வளர்த்து விடும்.

♦ ‘நேர்மையாக இருந்தால் பிழைக்கவே முடியாது’ என்பது அதை

கோட்டை விடுகிற பலருடைய வாதம். உண்மையில் நேர்மையின்மை தான் ஒருவரின் வாழ்க்கையையே நாசம் செய்யக்கூடியது. பணம், புகழ், வசதிக்கு ஆசைப்பட்டு, நேர்மையின்மையைப் புறந்தள்ளி விட்டு, பிறகு வாழ்க்கையை இழந்து நிற்கிற எத்தனையோ நடிகைகளைப் பற்றியும் தற்கொலை முடிவு வரை போகிற அவலத்தையும் அடிக்கடி கேள்விப்படுகிறோமில்லையா...நேர்மையின்மை என்கிற காரணத்தினால்தான் அமெரிக்காவில் 50 சதவிகித திருமணங்கள் இரண்டே வருடங்களில் முடிவுக்கு வருகின்றன. நேர்மையாக வாழ்வதென்பதை ஒரு சுவாரஸ்யமான சவால் என்றே சொல்ல லாம். இதுவரை எப்படியோ.... இனி நேர்மையாக வாழ்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்றால், செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உங்களை நீங்களே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

♦ நான் நேர்மையாக இந்தக் காரியத்தைச் செய்கிறேனா?

♦ நான் செய்கிற இந்த விஷயம் யாரையாவது காயப்படுத்துமா? யாருக்காவது உதவுமா?

♦ என்னுடைய தேர்வு எனக்கு மட்டுமே அமைதியையும் சந்தோஷத்தையும் தருமா? என்னைச் சார்ந்தவர்களுக்கும் தருமா? இப்படி சுய பரிசீலனை செய்து கொண்டு வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கப் பழகினால் நேர்மை உங்களுக்கு நட்பாகும். மகிழ்ச்சி என்பது நமக்குக் கிடைக்கிற பரிசல்ல... அது நாம் செய்கிற செயல்களின் விளைவு. துன்பம் என்பதும் நமக்கான தண்டனையல்ல... அதுவும் நமது செயல்களின் விளைவுதான். மகிழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், நேர்மையாக நடந்து கொள்ளப் பழகுவதுதான் ஒரே வழி. அது உங்கள் கைகளில்தான் உள்ளது. 

கண்களுக்கான யோகா பயிற்சிகள்

பல மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி செய்பவர்கள், அதிக நேரம் டிவி பார்ப்பவர்களுக்கு என் சிற பிரத்யேக யோகா பயிற்சிகள் உள்ளன. இந்த யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் சோர்வை நீக்கலாம். தினமும் காலை நேரத்தில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடத்தில் இந்த யோகா பயிற்சிகளையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

1. பயிற்சியை தொடங்கும் முன் வசதியாக விரிப்பில் அமர்ந்து இரு கண்களையும் இறுக்கமாக மூடவும். எவ்வளவு இறுக்கமாக மூட முடியுமோ அவ்வளவு இறுக்கமாக மூடவும். சில நொடிகளுக்கு பிறகு கண்களை முடிந்தவரை நன்கு திறக்கவும். பின்னர் கண்களை 5 முறை சாதாரணமாக மூடி, மூடி திறக்கவும். பின்னர் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடி சில நொடிகள் கழித்து திறக்கவும்.  

2.கண்களை மூடி ஒரு நிமிடம் ஆழமாக மூச்சுவிட வேண்டும். பின்னர் கண்களை திறந்து எதிரே இருக்கும் பொருளை கூர்மையாக பார்க்கவும். பின்னர் ஆழமாக மூச்சு விட்ட படி கண்களை மூடவும். அப்போது எதிரே இருக்கும் பொருளை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். இது கண்களின் சோர்வை நீக்கவும், கவனத்தை குவிக்கவும் உதவும் பயிற்சியாகும்.

3. கண் இமைகளை மூடி விழிகளை சுழற்றவும். முதலில் வலமிருந்து இடமாக 5 முறை சுழற்றவும். பின்னர் எதிர் திசையில் 5 முறை சுழற்றவும். பின்னர் 5 முறை கண்களை திறந்து மூடவும். 

4. கண்களை திறந்து வைத்துக் கொண்டு வசதியாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும். பின்னர் தலையை அசைக்காமல் கண்களால் எவ்வளவு தூரம் மேலே பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பார்க்கவும். சில நொடிகள் இது போல் பார்க்கவும். பின்னர் இது போல் கீழே பார்க்கவும், இது போல் வலது, இடது, மூக்கின் நுனிகளை பார்க்கவும். ஒவ்வொரு கோணத்திலும் சில நொடிகள் பார்த்து விட்டு கண்களை மூடி மூடி திறக்கவும். இது போல் 10 முறை செய்யவும்.

5. கைகளை முன்புறமாக நீட்டவும். கை விரல்களை மடக்கி கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்கவும். இப்போது கைவிரலை கண்களுக்கு மிக அருகில் கொண்டு வரவும். பின் பின்னோக்கி செல்லவும். இவ்வாறு விரல்களை முன்னும் பின்னும் கொண்டு செல்லும் போது கண்கள் கட்டை விரலை பார்த்தபடியே இருக்க வேண்டும். இவ்வாறு 15 முறை செய்யவும்.
 6. கடைசியாக இரு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஒன்று தேய்க்கவும். பின்னர் சூடான உள்ளங்கைகளை மூடிய கண்களின் மீது பொத்தி வைக்கவும். கண்களுக்குள் இதமான வெப்பம் பரவும். பின்னர் கண்களை திறக்கவும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கண் தசைகளும், பார்வையும் பலமடையும்.

Saturday, September 6, 2014

கட்டழகியாக கறிவேப்பிலை


சமையலில் சுவையை கூட்டுவதெ கறிவேப்பிலைதான். கடைகளில் காய் கறி வாங்கும் போதுசிறிது  கறிவேப்பிலையை கொசுறாக கேட்டு வாங்காத பெண்களே கிடையாது. கறிவேப்பிலையின் அருமை, பெருமையும், சத்தும் தெரியாமல் சாப்பாட்டில் கிடந்தால் வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.

  • உணவுச் செரிமானத்திற்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை. வைட்டமின் ஏ' சுண்ணாம்புச் சத்து, 'போலிக் ஆசிட்' போன்றவை நிரம்பி உள்ளது. இருப்புச்சத்தை மிகைப்படுத்தி, உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது. முதுமை பருவத்தில் ஏற்ப்படும் எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமலும் தடுக்கும். 


  • கெட்ட கொழுப்பைக் கரைத்து கட்டழகை கொடுக்கிறது.ஒவ்வாமையால்  தோலில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கிறது. இதிலுள்ள 'பி-கரோட்டின்' உடல் இயக்கத்தை சீராக்குகிறது. 

  • தலைமுடி கருப்பாகவும், அடர்த்தியாக வளரவும், கண் பார்வை கூர்மைக்கும் சிறந்த மூலிகையாக கறிவேப்பிலை பயன்படுகிறது. இதன்  இலைகளை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து தலையில் தேய்த்து வந்தால் நல்ல பலனைத் தரும்.

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இலையை பச்சையாக மென்று தின்றாலோ, அல்லது பொடி செய்து நீரில் கலந்து பருகினாலோ ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.                                                         இத்தனை மருத்துவக்குணங்கள் நிறைந்த கருவேப்பிலையின் பூர்வீகம் தென்னிந்தியா என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

பழைய சாதம் ... புதிய தகவல்!


நம் முன்னோர்கள் சத்துமிக்க உணவு சாப்பிட்டதால் தான், வயதானாலும் சிறிதும் சக்தி குறையாமல் இருந்தனர். அப்படி அவர்கள் உட்கொண்ட உணவுகளில் ஒன்று தான் பழைய சாதம்.

பழைய சாதம் சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பு, பன்றிக்காய்ச்சல், உள்ளிட்ட எந்த காய்ச்சலும் அணுகாது. உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல் புண், வயிற்றுவலி குணமடையவும், சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவையும் சரியாகும். சட்டென்று ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரவும், உடல் எடை குறையவும் பழைய சாதம் பயன்படுகிறது. முதல் நாள் சாதத்தில் நீருற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர் ஒருவர்.

சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை உணவாக பழைய சாதத்தை பயன்படுத்துவதால் உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகின்றன. மறு நாள் இதை குடிக்கும் போது உடல் சூடு தணிவதோடு குடல் புண், வயிற்றுவலி போன்றவற்றை குணப்படுத்தும். இதிலிருந்து நார்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. இந்த பழைய சாதம், உணவு முறையை சில நாள் தொடந்து சாப்பிட்டால், நல்ல வித்தியாசம் தெரியும்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னெவன்றால் உடலுக்கு அதிகமான சக்த்தியை தந்து, நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதை கொடுத்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது. சைனஸ் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்


சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5  ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்  மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும்  சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின்  அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு  தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது  எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும்  எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட்,  பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம்  கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தம்



இன்றைய காலத்தில் அலுவலகத்தில் உள்ள அதிகப்படியான வேலையால், தற்போது பெரும்பாலானோர் அதிக களைப்பால் மட்டுமின்றி, அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதுமட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம். சரி. இப்போது மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிமுறைகளை பார்க்காலம்.  

• வேலைப்பளு அதிகமாக இருந்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறம்பட வேலை செய்தாலும் கூட, கவனம் சிதறி மனம் அலை பாய்வது நடக்கத் தான் செய்யும்.

ஓய்வெடுக்க வேண்டுமானால் நீட்சி ஒரு எளிய வழியாகும். அதற்கு உடலை புரிந்து கொண்டு மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடலை அப்படி இப்படி அசைவு கொடுத்தால், தசை இறுக்கம் நீங்கும். மேலும் இது உங்கள் வேலையில் உங்களை கவனம் செலுத்த வைக்கும்.

• பச்சை பசுமையான இயற்கை சார்ந்த இடங்கள், கடல் சார்ந்த இடங்கள் அல்லது மலை சார்ந்த இடங்கள் போன்றவற்றில் பொழுதை கழிப்பதில் கிடைக்கும் அமைதி வேறு எங்கும் கிடைக்காது. இவ்வாறு இயற்கைக்கு அருகில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டால், தானாக அமைதி வந்து சேரும். 

• நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, உடன் வேலை செய்பவர்களுடன் வேடிக்கையாக பேசுவது, நகைச்சுவை புத்தகம் படிப்பது, குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது போன்றவைகள் உங்களுக்கு மன நிம்மதியை அளித்து அமைதியை ஏற்படுத்தும்.

• மனம் அமைதி பெறுவதற்கு, உங்களுக்கு பிடித்த ஸ்பாவிற்கு சென்று பெடிக்யூர் அல்லது பேஷியல் செய்து சருமத்திற்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்துங்கள்.

• உண்மையிலேயே அமைதி பெற வேண்டுமானால், ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தால், நிச்சயம் தியானத்திற்கான பலனை காணலாம். முக்கியமாக அது மன அழுத்தத்தை நீக்கும்.

• நேர்மறையான சிந்தனைகள் உங்கள் மனநிலையை நல்ல விதமாக ஊக்கமளிக்கும். அதனால் எதிர்மறையான சிந்தனைக்கு செல்லாமல், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்பத் தொடங்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறது என்று நம்புங்கள்.  

• வீட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து அமைதியை பெறுங்கள். கண்டிப்பாக ஓய்வு எடுக்கும் நேரம் கைபேசியை எல்லாம் அணைத்துவிடுங்கள்.

Wednesday, September 3, 2014

ஆரோக்கியமாக வாழ அளவாக சாப்பிடுங்கள்!


வயிறு நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை நமது முன்னோர்கள் அன்றே மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றார்கள். மூன்றில் ஒரு பங்கு தண்ணீர், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்ற அடிப்படையில் தான் நாம் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்பழக்கத்தை தொடந்து கடைப்பிடித்து வந்தாலே போதும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

இதனை கடைப்பிடிக்காத பட்சத்தில்தான் நோய்கள் எட்டிப் பார்க்கின்றன. அந்த வகையில் தவறான வகையில் தவறான உணவு பழக்க வழக்கத்தால் வருகின்ற பல நோய்களில், இருதய நோய் முக்கியமான இடத்தை வகிக்கிறது. பெரும்பாலும் இருதய நோய் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளால் தான் வருகிறது. அதற்காக கொழுப்பு தன்மையுள்ள உணவுகளை தவிர்த்து விடுவது பொருத்தமான தீர்வாக இருக்காது. அளவான, ஆரோக்கியமான முறையிலான உணவே, இதற்கு சரியான தீர்வாகும். உதாரணமாக கோழி இறைச்சியை சமைக்கும் போது, தோல் உட்பட கொழுப்புகளை முற்றிலும் அகற்றி விட வேண்டும்.

ஆட்டிறைச்சி சமைக்கும் போது, எண்ணெய் திரளும் கொழுப்புகளை அடியோடு அகற்றுங்கள். பெரும்பாலும் ஆட்டிறைச்சியை நன்றாக அவித்துவிட்டு சமைப்பதால் அதில் இருக்கும் அளவுக்கதிகமான கொழுப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை பொரியலுக்காக பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அளவுக்கு மீறி பட்டர், மாஜரின் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெய் மற்றும் கேக் போன்ற இனிப்புகளை வாங்கும் போதும், தயாரிக்கும் போதும் முடிந்தளவுக்கு கொழுப்பு தன்மையுள்ள சேர்மானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பச்சை மரக்கறி வகைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள் பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படுகிறது. சமைப்பதற்காக தேங்காய் எண்ணெய் உட்பட வேறு எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும், மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் அதிகமாக சேர்த்தால் தான் சாப்பாடு சுவையாக இருக்கும் என்பதெல்லாம் இல்லை.

சாப்பிட்ட பின்னர் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை முடிந்தவரைக்கும் தவிர்க்க வேண்டும். அதனால் உடற்பருமன் உங்களை அறியாமலேயே அதிகரிக்கும். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினசரி உணவு பழக்க வழக்கத்தை இவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டாலே, எந்த வகையிலும் இருதய நோய் உட்பட எந்தவொரு நோயும் நெருங்காது.