Pages

Friday, July 11, 2014

வெற்றிலையின் மருத்துவ ரகசியம்


சளி பிடிப்பது என்பது சாதரணமானதுதான், என்றாலும் ஒரு வாரத்துக்கு படாதபாடு படுத்திவிடும். அதுவும் சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என்றால் சொல்லவே வேண்டாம். இது போன்ற சமயங்களில் பெற்றோர்கள் சிறு, சிறு கை வைத்தியம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சிறு குழந்தைகளின் சளியை போக்குவதில் வெற்றிலை முக்கிய பங்காற்றுகிறது. மூலிகை குணம் நிறைந்த வெற்றிலையின் மகத்துவத்தை இப்பொழுது காண்போம்.

மூச்சு திணறல் 

குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும், மூச்சுதிணறலும் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் வெற்றிலை சிறந்த நிவாரணமாகும். வெற்றிலையை மெழுகுவர்த்தி நெருப்பில் லேசாகவாட்டி அதனுள் நாலைந்து வெற்றிலை இலைகளை சேர்த்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து அதில் 10 துளிகள், காலை மற்றும் மாலை கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். 

அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பில் பற்று போட நெஞ்சுசளி குணமாகும்.

வெற்றிலையை கடுகு எண்ணையில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்து கட்டி வந்தால், மூச்சுதிணறலும், இருமலும் சரியாகும்.

நுரையீரல் நோய்கள்

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், ஜன்னிக்கு வெற்றிலை சாற்றில் கஸ்துரி, கேரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுத்தால் குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். நுரையீரல் நோய்கள் இருந்தால், வெற்றிலை சாறு, இஞ்சி சாறு ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், பாதிப்புகள் குறையும். வெற்றிலையை அரைத்து கீல்வாத நோய்களுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கும் வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் நோய் குணமாக
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கசாயம் செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலையை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன
வாயில் செலுத்தினால் உடனே மலம் கழியும். வெற்றிலை சாறு 15 மில்லி அளவு வெந்நீரில் கலந்து கொடுத்தால் வயிற்று உப்புசம், மாந்தம், ஜன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம், வயிற்றுவலி குணமாகும்.

கட்டிகள் குணமாகும்.
வெற்றிலைச்சாறு நான்கு துளி காதில் விட்டால் எழுச்சியினால் ஏற்படும் வலி குணமாகும்.தலையில் நீர் கோர்த்து விடாமல் மூக்கில் ஒழுகும் சளிக்கும், வெற்றிலை சாறை, மூக்கில் விட்டால் குணமாகும். வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி, லேசாக தீயில் வாட்டி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால், கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்தால் நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்து திரிகடுகத்துடன் வெற்றிலை சாறு, தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.

குரல் வளம் கிடைக்கும்
வெற்றிலையின் வேரை சிறிதளவு வாயிலிட்டு மென்று வந்தால், குரல் வளம் உண்டாகும். வெற்றிலை சாறு சிறுநீரகத்தைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலை சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.


நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறதா?

தண்ணீரில் அதிகம் வேலை செய்பவர்களுக்கும், கால்சியம் குறைவாக உள்ளவர்களுக்கும் நகங்கள் அடிக்கடி உடையும். சோப்பிலிருக்கும் ரசாயனத்தின் பவர் தாங்காமல் சிலருக்கு நகங்கள் அவ்வப்போது உடையும். அடிக்கடி நகம் உடையும் பிரச்சனைகள் உள்ளவர்கள் ஆலிவ் ஆயில், அல்லது பாலேடு சேர்த்து நகத்தில் மைல்டாக மசாஜ் செய்ய வேண்டும்.

கடினமான வேலைகளை செய்யும்போது கைகளுக்கு க்ளவுஸ் வாங்கிப் பயன்படுத்தினால் நகங்கள் உடைபடுவது குறையும்.

நகங்களில் கொஞ்சமாக நெயில் பாலிஷ் ஒட்டிக் கொண்டு இருந்தால் அதை சுரண்டி எடுக்காமல் விட்டமின் 'இ' உள்ள நெயில்பாலிஷ் ரிமூவர் பயன்படுத்தி எடுங்கள். 

உள்ளங்கைகள் சாப்ட்டாக இருக்க சர்க்கரையில் தண்ணீர் தெளித்து
உள்ளங்கையில் நன்கு தேய்க்கவும். இரண்டு நாளுக்கு ஒருமுறை இப்படி செய்து வந்தால் உள்ளங்கைகள் 'பூ' போல மென்மையாக இருக்கும்.

வெதுவெதுப்பான சுடுநீரில் சிறிது உப்பு போட்டு நகங்கள் அந்த நீரில் நன்றாக மூழ்குமாறு கொஞ்ச நேரம் வைத்தால் நகங்கள் உடையாது.

அடிக்கடி நெயில் பாலிஷ் உபயோகப்படுத்துவதால், நகங்களின் இடுக்கில் அழுக்கு சேராமல் நகங்களை பாதுகாக்க முடியும்.

நகங்களை நன்கு கழுவி சுத்தப்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நகங்கள் மூலம் பரவும் தொற்றுக்களை தடுக்க முடியும்.

நகங்களின் மூலம் நமது ஆரோக்கியத்தையும் கண்டுகொள்ள முடியும். நமது உடலில் மஞ்சள்காமாலை நோய் இருந்தால் நகங்கள் மஞ்சளாக மாறிவிடும்.

உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் நகங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். நகங்கள் ரோஸ் நிறத்தில் இருந்தால் நகங்களும், உடலும் ஆரோக்கியமாக உள்ளதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா?

எனவே மேலே சொன்ன இந்த முறைகளைப் பயன்படுத்தி நகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். 

கர்ப்பகாலத்தில் இப்படித்தான் பற்களை பாதுகாக்கனும்

  • கர்ப்பமாயிருக்கும் போது இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதாலும், பல் சொத்தை ஏற்படுத்தும் பொருட்களை சாப்பிடுவதாலும் உடனே பற்கள் பாதிக்கிறது. இதனால் பற்களை உடனே சுத்தப்படுத்த வேண்டும். 
  • மசக்கையின் போது அடிக்கடி வாந்தி வரும். அதனால் வாந்தி எடுத்தவுடன் பல் துலக்க வேண்டாம். வாய் மட்டும் கொப்பளித்தால் போதும். ஏனெனில் வாந்தி எடுக்கும் போது உணவுக்குழாய் மூலம் மேலே வரும் ஆசிட் பல்லை பாதிக்கும். அப்போது பல் துலக்கினால் பல்லைச் சுற்றி உள்ள திசுக்களின் வழியாக அது உடம்பினுள் சென்று குழந்தையை தாக்கலாம். வாந்தி எடுத்தவுடன் இளநீர் குடிக்கலாம். அது அமிலத்திற்கு எதிராக செயல்படும்.
  • கர்ப்பத்தின் போது பழத்தை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடுவது நல்லது. சில பற்களில் உள்ள அமிலமானது உங்கள் பற்களை தாக்கலாம். அதனால் ஜூசை ஸ்ட்ரா போட்டு குடிங்க.
  • கரு உருவான ஆரம்ப கால கட்டத்தில் பல் சிகிச்சை வேண்டவே வேண்டாம்.
  • கர்ப்பிணிகள் இரவில் ஒரே பக்கம் படுத்து உறங்கக் கூடாது. இதனால் குழந்தையின் முக தாடை வளர்ச்சி சீராக இருக்காது.
  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ப்ளோரைடு டூத் பேஸ்ட், மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் மவுத் வாஷையும் பயன்படுத்தலாம்.
  • தயிர், சீஸ் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவது நல்லது. எடை கூடுதலாக உள்ளவர்கள் மட்டும் இதை தவிர்க்கவும்.
  • சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை அதிகமாகும். அது குழந்தை பிறந்தவுடன் சரியாகிவிடும். ஆனால் பல் ஈறுகளில் பாதிப்பு இருப்பவர்களுக்கு குழந்தை பிறந்த பின்னும் சர்க்கரை நோய் சரியாகாமல் போக வாய்ப்பு உள்ளது.     
  • எனவே இந்தப் பிரச்சனைகள் வராமல் இருக்க கருத்தரிப்பதற்கு முன்பே பல் செக்கப் செய்து கொள்வது நல்லது. பற்களில் பிரச்சனை இல்லை என்றாலும் கூட செக்கப் செய்து கொள்வது நல்லது. இதனால் நமக்குத் தெரியாமல் பல்லில் இருக்கும் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரி செய்துவிடலாம். 






ஸ்வீட் சாப்பிட இஷ்டமா உங்களுக்கு?

பண்டிகை என்றாலே  நம் வீட்டிலும் சரி, உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலும் சரி சாப்பிட கொடுப்பது ஸ்வீட்தான். ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

100 கலோரியை நமது உடலிலிருந்து அகற்ற  வேண்டுமானால் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடம் நடந்தாக வேண்டும். ஆக இதனை ஞாபகத்தில் வைத்துச் சுவையுங்கள்.

குலோப்ஜாமூன்:
பால், மாவு கலந்து மாவை எண்ணெய்யில் பொரித்து, ஜீராவில் ஊற வைத்து எடுத்த ஒரு குலோப்ஜாமூனில் சராசரியாக 250 கலோரிகள் உள்ளன.

அதே சமயம் ரசகுல்லா செய்து சாப்பிடீர்களேயானால் அதன் கலோரி மதிப்பு-120 கலோரிதான். இதில் சர்க்கரை கம்மி, மேலும் பொரிக்கப்பட்டதல்ல என்பதும் உண்மை!

பூந்தி லட்டு:

கடலைமாவை பிசைந்து உருட்டி சூடான எண்ணையில், ஜார்னியல் தேய்த்து, காரப் பூந்தியை உருவாக்கி, ஜீராவில் கலந்து, பிடித்து சாப்பிடுவது. இதில் சர்க்கரை அதிகம். ஊட்டச்சத்து குறைவான பட்சணம். இதன் சராசரி மதிப்பு 270 கலோரி.

இதற்கு பதிலாக பாசிப்பருப்பு உருண்டை செய்து சாப்பிடலாம். இதில் சர்க்கரையின் அளவு கம்மி, அதே சமயம் புரோட்டின் சத்து அதிகம். இதன் சராசரி மதிப்பு 180 கலோரி மட்டுமே.

ரவா கேக் அல்லது ரவ சீரா:

ரவையை வறுத்து செய்யப்படுவது அதிக கொழுப்பு. சர்க்கரை மற்றும் கர்ப்ஹோஹைடிரேட்ஸ் அதிகம். இதன் சராசரி மதிப்பு-270. இதற்க்கு மாறாக அரிசி கீர் செய்து சாப்பிடலாம். இதன் ஊட்டச்சத்து பூரோட்டின் ஆகியவை உடலுக்கு நல்லது. இதன் சராசரி கலோரி மதிப்பு -180.

ஜாங்கிரி:

மைதா மாவு-எண்ணெய்-சர்க்கரை இணைந்த மற்றொரு இனிப்பு. இதன் கலோரி மதிப்பு-250. இதற்கு மாற்றாக ரசமலாய் செய்து சாப்பிடலாம். பொரிக்காததாலும், பால் அதிகம் சேர்க்கப்படுவதால்  உடலுக்கு நல்லது. இதன் ஒரு பீஸ் சரசாரி கலோரி மதிப்பு 150 மட்டுமே.

ஆக சாப்பிடுங்க! ஆனா அளவா சாப்பிட்டீங்கன்னா, உங்க ஆரோக்கியத்துக்கு நல்லது.

Thursday, July 3, 2014

உடல் நோயை தீர்க்கும் பாகற்காய்

பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு  அருமருந்தாகும். இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்து போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.
 
பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து  விடும். பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக்  கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற
அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண்  நோய் குணமாகும். இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்  பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும். பாகல் இலைச்  சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ்  எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். ஓர்  அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால்  காசநோயை மட்டுப்படுத்தும். பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும்  பயனளிக்கக் கூடியது.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

Tuesday, July 1, 2014

தோல் நிறத்தைப் பாதுகாக்க திராட்சை சாப்பிடுங்க!






திராட்சை பழச்சாற்றில் பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ளது. இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. இது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மேலும் திராட்சை பழத்தை பயன்படுத்தி சருமத்தை எவ்வாறு பாராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.


  • திராட்சை பழச்சாறு இறந்த தோலை நீக்குவதில் உதவக் கூடியதாகும். இதை நீங்கள் சருமத்தில் போட்டால் போதும். உடனடியாக தோல் உரிய ஆரம்பித்து விடும். இவை இறந்த திசுக்களை நீக்கி சுறுக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல இரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நீட்சித்தன்மையையும் திராட்சை அதிகரிக்கின்றது. நீர் பதத்தை சருமத்திற்கு கொடுக்கும் போது திராட்சை சாறு ஈரப்பதத்தை சருமத்திற்கு இயற்கையாக அளிக்கின்றது.
  • ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவிவிட வேண்டும். இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.
  • திராட்சை பழச்சாறு 2 ஸ்பூன், பாசிபயிறு மாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதம் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைவதை காணலாம்.
  • திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப்   பாதுகாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று ஸ்பூன் என இருவேளை   சாப்பிட்டு வர குணம் பெறலாம். 
  • எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும்.  தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மன தைரியம் ஏற்படும்.
  • திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண்,  வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது   நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.
  • வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால்   வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு, இயற்கை அளவிலேயே   இருக்கும்.

உபயோகமான சமையல் குறிப்புகள் - பாகம் 5


உளுத்தம்வடை செய்யும் போது சிறிதளவு இட்லி மாவு சேர்த்துச் செய்தால், வடை சுடும் போது அதிகம் எண்ணெய் குடிக்காததோடு, சுவையும் நன்றாக இருக்கும்.

பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு குறைவாக இருக்கும்.

கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்த பின் வேக வைத்தால் கிழங்கு விரைவில் வெந்து விடும்.

இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.

தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.



அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.

இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.


மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும். இல்லையென்றால் சிறிதாக நறுக்கியவை வெந்தும், பெரிதாக நறுக்கியவை வேகாமலும் இருக்கும்.