Pages

Saturday, May 31, 2014

வெங்காயத்தில் மருத்துவக் குணம் ஏராளம்

வெங்காயம்
வெங்காயத்தில் காணப்படும் 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற வேதிப்பொருள்தான் அதன் நெடிக்கும், நம் கண்களில் கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் ஏறக்குறைய ஒரே தன்மை உடையவை, ஒரே பலனைத் தருபவை. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது. வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாமா...

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* சமஅளவு வெங்காயச்சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட, காதுவலி, குறையும்.

* வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

* வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட, எல்லா மூலக் கோளாறுகளும் நீங்கும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து, மீண்டும் லேசாகச் சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட, கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

* வெங்காயச்சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடித்தால் இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர, பல் வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட, உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

* படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசி வந்தால் அவை மறைந்து விடும்.

* திடீரென மயக்கமடைந்தால் வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால் மயக்கம் தெளியும்.

* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

* பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர, மேகநோய் நீங்கும்.

* வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் மேக நோய் குறையும்.

* வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

* பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

* வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. செரிமானத்துக்கும் உதவுகிறது.

* வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

எலும்புகளுக்கு உறுதியளிக்கும் பால்

பால்
ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுப் பொருட்களில் பால் முக்கிய இடம் பெறுகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுப் பொருளாக பால் மற்றும் பால்பொருட்கள் விளங்குகின்றன. இதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்...

* பால் மற்றும் பால்பொருட்கள் குறைந்த ஆற்றல் வழங்குபவை. ஒரு 'கப்' பாலில் 80 முதல் 120 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. எனவே உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புபவர்களும், குண்டு உடலை குறைக்க விரும்புபவர்களும் பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்க்கலாம்.

* பால் உடலுக்குத் தேவையான 100 சதவீத கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும். 75 சதவீதம் வைட்டமின்-டி மற்றும் வைட்டமின் பி-12 கிடைக்கச் செய்யும்.

* 250 கிராம் எடை கொண்ட ஒரு கோப்பை பாலில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 478 கிராம் வைட்டமின்-ஏ, 32 சதவீதம் வைட்டமின்-டி காணப்படுகிறது. மேலும் வைட்டமின்-கே, பி-குழும வைட்டமின்களான தயாமின், ரிபோபிளேவின், நியாசின், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-12 ஆகியவையும் குறைந்த அளவில் உள்ளன.

* பாலில் கொழுப்புச் சத்து குறைந்த அளவில் காணப்படுகிறது. 250 கிராம் பாலில் 2.4 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது.

* உடம்புக்கு வலுச்சேர்க்கும் அத்தியாவசிய தாதுஉப்புகளான கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்றவை சராசரியாக காணப்படுகிறது.

* பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரதப்பொருட்கள் மிகுந்துள்ளன. இவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு உதவும். சிறுவயது முதலே பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு பலவீனம், எலும்பு உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

* பாலில் உள்ள கால்சியமும், பாஸ்பரசும் பற்களுக்கு நன்மை பயக்கும். இதிலுள்ள கேசின் என்ற பொருள் பற்களின் எனாமலை பாதுகாக்கும்.

* பால் உணவுகளை, பழங்களுடன் குறைந்த உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* 'கார்டியோவாஸ்குலார்' எனும் இதயபாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் பால் மற்றும் பால் பொருட்களுக்கு உண்டு. கால்சியம் தாதுவானது ரத்தத்தில் கெட்ட கொழுப்பு பொருட்கள் அதிகமாவதை தடுக்கிறது. இதனால் இதயபாதிப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

* சமீபத்தில் 37 ஆயிரம் நடுத்தர வயது பெண்மணிகளுக்கு பால் உணவுகளை கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் டைப்-2 நீரிழிவு கட்டுப்படுத்தப்பட்டது தெரியவந்தது.

நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை

தண்டுக்கீரை
உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரை வகை இதுதான். சிறப்புமிக்க தண்டுக்கீரையின் சத்துக்களை பார்க்கலாம்.....

* தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அம ரன்தஸ் ஸ்பைனஸ் ஆகும். தண்டுக்கீரையில் 70-க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.

* சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.

* பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.
* கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

* லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

* உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

* நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு 'ஆன்டி-ஆக்ஸிடெண்ட்' பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.

Friday, May 30, 2014

குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்!

குழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்பு எவ்வளவோ இருந்தாலும், தன் மேடான வயிற்றை தடவிப்பார்த்து, 'எப்படா செல்லம் நீ பிறப்பாய்?' என்று கேட்ட கர்ப்பகால நாட்கள் எவ்வளவு சுகமானவை. வயிற்றின் உள்ளே இருந்தாலும், 'உங்கள் கேள்வி எனக்கும் கேட்கத்தான் செய்கிறது அம்மா..' என்பதுபோல் குழந்தை கொடுக்கும் உதையை அனுபவித்தது எவ்வளவு பெரிய பாக்யம்.

பிரசவத்திற்கு சில வாரங்களே இருந்தாலும், வயிற்றுக்குள் தன் குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பதைப் பார்க்க ஆசைப்பட்டு 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தை சிரிப்பதையும், கொட்டாவி விடுவதையும், கை-கால்களை அசைப்பதையும் பார்த்து மகிழ்ந்ததோடு மட்டுமில்லாமல், அதை பதிவு செய்துவைத்துக்கொண்டு பிரசவத்திற்கு முந்தைய நாள் வரை கம்ப்யூட்டர் திரையில் போட்டுப்பார்த்து சிலிர்த்த அனுபவங்களும் எத்தனை.. எத்தனை!

விம்மல், வலி, வேதனை அத்தனையையும் சகித்துக்கொண்டு அந்த அன்புக் குழந்தையைப் பெற்று, அதன் முகத்தை பார்த்தபோது, 'நான் எவ்வளவோ படித்திருந்தாலும், இந்த உலகத்தில் நவீனமாக என்னால் எத்தனையோ படைக்கப்பட்டாலும், அத்தனையையும் விட சிறந்த அற்புத படைப்பு நீதான்..' என்று உச்சி முகர்ந்து உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்ததை எல்லாம் நினைத்துப் பாருங்கள்.

அப்படி நீங்கள் மகிழ்ந்த உங்கள் அன்பு குழந்தைக்கு இப்போது எத்தனை வயது?

- நான்கு வயதோ - ஐந்து வயதோ

- பத்து வயதோ

இப்போது அந்த குழந்தை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கலாம். படிக்கும். விளையாடும். ஆனால் அது சிரிப்பை தொலைத்துவிட்டு நிற்கிறது. சுயசிந்தனையை மேம்படுத்த முடியாமல் வாடுகிறது. உற்சாகத்தை இழந்து தவிக்கிறது.

நினைத்துப் பாருங்கள். இனிக்க இனிக்க குழந்தையிடம் பேசிய அந்த நாள் எங்கே போனது. குழையக் குழைய கொஞ்சிய அந்த நாட்கள் எங்கே போனது. 'நிலாவைப் பார்.. அதன் உள்ளே ஒரு பாட்டி இருக்கிறாள் பார்..' என்றெல்லாம் குழந்தையை குதூகலிக்க வைத்த அந்த வாஞ்சை எங்கே போனது?!

இன்று குழந்தைகள் பைகளை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு போகின்றன. போகும்போது உடல் கனத்தாலும், மூளை சற்று அமைதியாக இருக்கும். படித்துவிட்டு திரும்பி வரும் போது உடல் கனத்தோடு, பாடச்சுமையால் மூளையும் கனமாகி, சோர்ந்து போய் வருகிறார்கள். 'மாலை சோர்ந்துபோய் வீடு திரும்பும் கணவரை, இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்கவேண்டும்' என்ற பாடத்தை கடைபிடிக்கும் தாய்மார்களில் எத்தனை பேருக்கு உடலும், மூளையும், மனதும் கனத்துப்போய், களைத்துப்போய் வீடு திரும்பும் குழந்தைகளையும் அதுபோல் வரவேற்க வேண்டும் என்பது தெரிகிறது? பலருக்கும் தெரிவதில்லை.

தெரிந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. அதற்கு காரணம், அளவற்ற சுயநலம். தன் அடையாளமாக, தன் வாரிசாக, தான் இறந்த பின்பும் தன் பெயரை நிலைநாட்ட இருக்கிற குழந்தை படிப்பில், அறிவில், ஆற்றலில், ஆரோக்கியத்தில், ஆடலில், பாடலில், விளையாட்டில் அத்தனையிலும் முதலிடத்தில் நிற்க வேண்டும் என்ற பேராசை. அதற்காக சில நேரங்களில் சிலர் தங்கள் மனசாட்சியை மறந்து வதைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

தப்பு, சரி என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் சக்தி அதிகம். இந்த வார்த்தைகளை குழந்தைகளிடம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் தப்பு, சரி என்பதன் அர்த்தத்தை குழந்தைகளிடம் சரியாக விளக்க நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

தப்பி ஓடுவது சில இடங்களில் தப்பாக இருக்கிறது. சில இடங்களில் சரியாக இருக்கிறது. தாக்குவது சில இடங்களில் சரியாக இருக்கிறது. சில இடங்களில் தப்பாக இருக்கிறது. எதிர்வாதம் செய்வது சில சூழல்களில் தப்பாக இருக்கிறது. சில சூழல்களில் சரியாக இருக்கிறது. இப்படியே நீங்கள் சிந்தித்துக்கொண்டு வந்தால் தப்பு, சரி என்று படும். சரி தப்பென்று படும். மிகச் சரியானதென்று உணர்த்தப்பட்ட சில விஷயங்களை காலம் ரொம்பவும் தப்பு என்று மாற்றியும் உணர்த்தியிருக்கிறது. ஒருவருக்கு தப்பாக தெரிவது, இன்னொருவருக்கு சரியானதாகவும் ஆகியிருக்கிறது. அதனால் குழந்தைகள் விஷயத்தில் தப்பு, சரி இரண்டையும் போட்டு ரொம்ப குழப்பாதீர்கள்.

குழந்தை செய்யும் ஒரு விஷயம், உங்கள் பார்வையில் தப்பாக தெரியும்போது, "அந்த செயல் என் பார்வையில் இதனால்... இப்படி... தப்பாகத் தெரிகிறது. சமூகமும் இதனால்.. இப்படி.. இதனை.. தப்பாகத்தான் எடுத்துக்கொள்ளும். தப்பாக உணரப்படும் ஒரு விஷயம் இப்படிப்பட்ட எதிர்விளைவுகளை உருவாக்கும்` என்பதை குழந்தைகளிடம் விளக்குங்கள். அதை அவர்கள் புரிந்துகொண்டு, அதைச் செய்யக்கூடாது என்று முடிவு செய்யட்டும்.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. ஆனால் ரசித்து, அனுபவித்து குழந்தைகள் வளர்க்கப்படாமல், முரண்பாட்டோடு வளர்க்கப்படுகிறார்கள். பொய் சொல்லாதே என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டு பெற்றோர் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களைப் பற்றிய நிறைகளைத்தான் பேசவேண்டும் என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டு, மற்றவர்களைப் பற்றிய குறைகளை பெற்றோர் பேசிக் கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டு குழந்தையிடம் இருக்கும் கலைத் திறனை பாராட்டிவிட்டு, தன் குழந்தை அதுபோன்ற கலைச் செயலில் ஈடுபடும்போது, 'வேலை மெனக்கெட்டு அதைப் போய் செய்கிறாயே' என்று முளையிலே கிள்ளி எறிவார்கள். தனக்கு படித்து தந்த ஆசிரியர்களை கண்டபடி விமர்சித்துவிட்டு, தன் குழந்தையிடம் 'நீ உன் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்' என்று உபதேசிப்பார்கள். இப்படி குழந்தை வளர்ப்புக்கலை பெரும்பாலான பெற்றோரால் முரண்பாடாக கையாளப்படுகிறது.

இன்று வீட்டுக்கு ஒரு குழந்தை. பெற்றோர் இருவரும் சம்பாதிக்கிறார்கள். இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதபோது உணர்வுரீதியாக ஒற்றைக் குழந்தையை தனிமைப்படுத்தி விடுகிறார்கள். தனிமைப்படுத்தப்படும் குழந்தையோடு அதிக நேரத்தை செலவிட்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் பல பெற்றோர் அதிக நேரம் உழைத்து, குழந்தையின் தனிமையை அதிகப்படுத்திவிடுகிறார்கள். குழந்தை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போது, 'உனக்காகத்தானே கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நான்கு வீடு.. இரண்டு கார்.. வங்கியில் சில லட்சம்... பங்குச் சந்தையில் பல லட்சம் சேர்த்துவைத்திருக்கிறேன்' என்பார்கள்.

நான்காம் வகுப்பு படிக்கும் எந்த குழந்தை, 'அப்பா எனக்கு நான்கு வீடு வாங்கி வையுங்கள்' என்று கேட்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் எந்த குழந்தை, 'தனக்கு எத்தனை கார்கள் வாங்கி வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்கிறது. எந்த குழந்தையும் எப்போதும் அவைகளை கேட்டதில்லை. அன்பையும், பாசத்தையும், அவைகளை வெளிப்படுத்த தேவையான நேரத்தையும், அதற்குரிய அமைதியான சூழ்நிலையையும்தானே எல்லா குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களிடம் எதிர்பார்க்கின்றன.

இந்த பூமி சுழன்று கொண்டே இருக்கிறது. அது இயற்கை. அதுபோல் உங்கள் குழந்தை வளர்ந்துகொண்டே இருக்கிறது. பள்ளிக்கு சென்றது. பின்பு கல்லூரிக்குச் செல்லும். அடுத்து வேலை பார்க்கும். அப்போது அதன் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மகள் மாணவி ஆவாள். அதிகாரி ஆவாள். காதலி ஆவாள். மனைவி ஆவாள். அப்போது அவள் உறவுகளாலும், கிளைகளாலும் பரந்து விரிந்துகொண்டிருப்பாள். அந்த நேரத்தில் முதுமையால் நீங்கள் உங்களை சுருக்கிக்கொண்டிருப்பீர்கள். இந்த உண்மையை இன்றே உணருங்கள். காலம் மாறும். உறவுகள் மாறும். காட்சிகள் மாறும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இன்றே இப்போதே நீங்கள் தயாராகிவிட்டால் உங்களுக்குள் ஒரு பக்குவம் வந்துவிடும். குழந்தைகள் மீது உங்கள் வேகமும், எதிர்பார்ப்பும் மிதமாகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

குழந்தைகளின் உணர்வுகளை மதித்து நீங்கள் அவர்களை வளர்த்தால், உங்கள் மகள் திருமண வயதில் 'என் அப்பாவைப்போல் கணவர் அமையவேண்டும்' என்பாள். உங்கள் மகன், 'என் அம்மாவைப் போன்ற குணாதிசயங்கள் கொண்ட மனைவி வேண்டும்' என்பான். அதுவே உங்களின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

Wednesday, May 28, 2014

குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'கை கொடுத்துக்கிட்டே இருங்க...!

'உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்' என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.

முக்கியமாக, தம் பிள்ளைகளை மற்றவர்கள் முன்னிலையில் குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளை மேதைகளாக ஆக்க முடியாவிட்டாலும், குடிபோதை, போதைமருந்து, புகை, சிகரெட் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகி விடாதவாறு பெற்றோர் கவனமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால் தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.

'மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதுபோல் எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். 

அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுக்களிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது 'உற்சாக டானிக்'கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

தாய் என்பவள் அன்பு காட்டுபவராக மட்டும் இல்லாமல், அறிவூட்டுபவராகவும் இருக்க வேண்டும். டி.வி. பார்ப்பது, தோழிகளுடன் அரட்டை போன்ற பொழுதுபோக்குகளை கொஞ்சம் உங்கள் குழந்தைகளுக்காக தியாகம் பண்ணுங்கள். தாய்மையின் பெருமையை உணருங்கள்.

இயற்கை ஆணைவிட பெண்ணுக்கே அதிக பொறுப்பை கொடுத்திருக்கிறது. குடும்பத்தை பராமரிப்பதுதான் அந்த பொறுப்பு. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அன்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'சொர்க்கம்' எங்கே இருக்கிறது என்று தேடுபவனிடம் 'உன்னைப் பெற்ற தாயின் காலடியில்' என்று சொல்கிறது ஒரு பழமொழி. அதிக தவறுகளைத் தெரிந்தும், தெரியாமலும் செய்து விட்டு, அதற்கான பாவங்களை கழுவ கோவில், குளம் என்று செல்வதில் பயன் ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சிப் படி நேர்மையாக நடந்து கொண்டால் போதும்.

சமையலறையில் தினமும் பயன்படுத்தும் பொருட்களிலுள்ள மருத்துவ குணங்கள்!

*வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வெளியாகும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.  


* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.


* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தசோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.


* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது.


* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.


* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்­ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் காலில் சாதாரணமாக வரக்கூடியது சேற்றுப்புண். இதை குணமாக்க, கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு, மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் போதும். சேற்றுப்புண் ஆறிவிடும்.


* சிலருக்கு தோல் நோய்கள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச்
சொரசொரப்பாக இருக்கும். அவர்கள், கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து அந்த சொரசொரப்பான இடத்தின் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்.

முதுகு வலி முற்றிலும் மறைய!

இன்று அவசரகதியில் இயங்கும் வாழ்க்கையின் காரணமாக அனேக
மக்களுக்கு முதுகுப்புறத்திலும், தண்டுவடத்திலும் வலி, அல்லது பல நோய்கள் தோன்றி அல்லல்படுத்துகின்றன. மருத்துவரை நாடிப்போய் சிகிச்சை பெற்றாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை, தொடர்கின்றன. கழுத்தில், முதுகில் தாக்கும் நோய்கள் பலவகைப்படுகின்றன.

Arthritis (மூட்டுவலி, வீக்கம்), Spondylosis (ஸ்பான்டிலோசிஸ்), Rheumatism, (ருமாடிசம்), Fibrasis (கட்டி) Slip disc (டிஸ்க் மற்றும் பல வெளிவருதல் தூலகருக்கு இவற்றில் தோன்றும் வலி தோள்களுக்கு (ARMS), பரவினால் அதற்குப் பெயர் Neuritis, Neuralgia, தண்டுவடத்துடன் வயிற்றினுள் இருக்கும் பகுதிகள் நுண்ணிய நரம்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகையால் தண்டுவடத்திற்கு ஏற்படும் பாதிப்பு வயிற்றின் பகுதிகளை, பொதுவாக உடலையே பாதிக்கிறது. (உடம்பு) (ரத்தநாளம் குறுகுதல், தடை ஏத்படல்) (Cervical Stenosis).
தண்டுவடத்தில் ஏற்படும் நோய்கள் தொழிலில் செயல்பாட்டினை மிகவும் பாதிக்கும். மேற்கொண்டு தற்கால நோய்கள் தாக்க வழிவகுக்கும். இதை தடுப்பதற்கு வேண்டிய முயற்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Cervical Spondylosis மிகவும் ஆபத்தானது. சிறிய காயம் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் சதைகள் பலவீனப்பட்டு. தசைநார்க்கும் சேர்ந்து பலமிழந்தால், எலும்புக்கும் நலிவடையத் தொடங்கும். அனேகர் நன்கு நடைப்பயிற்சி செய்யலாம். உடல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இருப்பினும் அவர்களுக்கு முதுகுவலி வரலாம். காரணம் தான் என்ன? அவர்கள் முதுகு சம்பந்தப்பட்ட தசைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அல்லது முதுகுவலிக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அதனோடு தொடர்புள்ள வலுவற்ற தசைகளை வலுப்படுத்த முயற்சியெடுப்பதில்லை.

சிறிய வலி தலைவலி வந்தால் கூட மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். தண்டுவடத்தை நன்கு சோதித்து தகுந்த சிகிச்சை பெறத் தவறினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். எனவே அவை சம்பந்தப்பட்ட விபரங்களை தெரிந்து கொண்டால் எச்சரிக்கையுடன் நாம் செயல்பட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.

முதுகுவலிக்கான காரணங்கள்
ஏற்கனவே கூறியபடி தண்டுவடம் ஒரு முக்கியமான உறுப்பாகும். அவ்வுறுப்பும், தசைகளும் நன்கு செயல்பட்டால் தான் பிரச்சனைகள் எழா. பிரச்சனைகளின் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஏறும் வயது - வலுவிழக்கும் மூட்டுகள்
முதுகுவலிக்கு முக்கியமான காரணம் உடம்பிலுள்ள எலும்புகள், மூட்டுகள் வயதாகும் போது தங்கள் செயல்திறமையை இழக்கின்றன. தண்டுவடத்திலுள்ள மூட்டுகள் (Joints) வயதாக தேய்ந்து உடையலாம் இளம்வயதில் கூட இது நேரலாம். ஆனால் ஓரிரண்டு இடங்களில் மட்டும் இம்மாதிரி பாதிப்பு இருக்கும்.

தண்டுவட தகடு தேயலாம்
தண்டுவடத்தில் உள்ள தகடுகள் (Disc) தேய்ந்து, விலகியிருக்கலாம் இதன் காரணமாக முதுகுவலி வரலாம். ஆண்களிடம் இப்பாதிப்பு அதிகமாகயிருக்கும். கடினமான வேலை, உடம்பை வருத்தி பணி புரிந்தாலோ முதுகுத்தண்டு பாதிக்கப்படும். அங்கு வரக்கூடிய நரம்புகளை அழுத்தி வலியை உண்டாக்கும். இதை சரியான விதத்தில் கவனிக்கத் தவறினால் கழுத்து தொங்க நேரிடும்.

மூட்டுகள் பாதிக்கப்படுதல்
தண்டுவடத்திலுள்ள மூட்டுகள் தேய்ந்துவிட்டால் அவற்றுள் செல்லும் நரம்புகள் குறைந்து காணப்படும். இதனால் வலி தோன்றும்.

தசைநார்கள் பாதிக்கப்படுதல்
முதுகுப்புறத்திலுள்ள எலும்புகளின் இடையுள்ள தசைகற்கள் இளகும் தன்மையை இழந்தால் (Stiff) மிகவும் மிருதுவாகயிருந்தால், முதுகில் வலி தோன்றும். இவ்வலியை கழுத்திலும் உணரலாம்.

வயிற்றுப் புண்ணும், அஜீரணமும்
அஜீரணக் கோளாறினாலும், வயிற்றுப் புண்ணாலும் ஏற்படக் கூடிய வலியானது வயிற்றின் மேற்புறத்திலுள்ள பகுதியை பாதிக்கும் சில சமயம் முதுகின் பின்புறத்தையும் பாதித்து வலி தோன்றலாம். இதைத் தவிர்க்க வாழ்க்கை வாழும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு, மன உளைச்சலைக் கட்டுப்படுத்தல், புகையிலை, ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்த்தல் உடம்பை ஆரோக்கியத்தில் வைக்கும்.

திடீரென்று வளைந்தாலோ, குனிந்தாலோ தசைநார்கள் கிழிய நேரிடலாம். டிஸ்க் பாதிக்கப்படலாம். அதிகமாக தசைநார்கள் கிழிந்தால், டிஸ்க் பழுதுபட்டு வெளியே நீட்டிக் கொள்ள நேரிடும். இதன் காரணமாக வலியெடுக்கும்.

தேகத்தை ஆக்கப்படுத்தும் பயிற்சியின்மை
Warm - up Exercise எனப்படும் தேகத்தை உற்சாகப்படுத்தும் பயிற்சியை முதலில் மேற்கொள்ளாமல், திடீரென்று உடற்பயிற்சி செய்தால், தசைகளுக்கு ஊறு நேரும். Gymnastick என்று திடீரென்று போகாமல் விட்டுவிடுதல் தசைகளைப் பாதிக்கும். டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை தகுந்த முன்னேற்பாடு பயிற்சியில்லாமல் விளையாட ஆரம்பித்தல் தசைகளைப் பாதிக்கும்.

கனமான பொருட்களை தூக்குதல்
கனமான பொருட்களை தூக்குதல் முதுகுத் தண்டைப் பாதிக்கும் ஏற்கனவே பழுதுபட்டிருந்தால், விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும்.

உடல் பருமன்
அளவிற்கு மீறி உடல் பருமனாகயிருந்தால், முதுகுத்தண்டுக்கு அழுத்தம் அதிகப்படும். இதனால் பாதிப்பு லேசாக இருக்கும்.

நிற்கும் உட்காரும் விதம்
நிற்கும் பொழுதோ, உட்காரும் பொழுதோ சரியான படி நிமிர்ந்து, எல்லா எலும்பு மூட்டுகளும் நேர்கோட்டிலிருக்கும் வகையில் நின்று, உட்காரமலிருந்தால் நாட்கள் செல்லச் செல்ல பாதிப்பு ஏற்படும். சதைகள், மூட்டுகள், எலும்புகள் மிகவும் பழுதடைந்து வலியை ஏற்படுத்தும்.

விபத்தில் முதுகு உடைதல்
ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டவர் கை, கால்களில் பாரிச வாயு வந்தது போல் செயலிழந்து காணப்பட்டால், அந்நபர் கழுத்தில், முதுகில் அடிபட்டு எலும்பு உடைபட்டிருக்க வேண்டுமென்பது தெரிந்து கொள்ள வேண்டும். உடனே எந்தவிதமான உடம்பசைவுயில்லாமல் பார்த்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். எக்ஸ்ரேயெடுத்து தகுந்த சிகிச்சை தர வேண்டும். (அடிபட்டி நபரின் முதுகுத்தண்டு வளையாமல் லேசாக இருக்கும்படி பார்த்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்).